பக்கம் எண் :

பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்

சுயசரிதை

ஓவியர் மணி ஸ்ரீ இரவிவர்மா


சந்திர னொளியை ஈசன்
  சமைத்தது அது பருக வென்றே
வந்திடு சாத கப்புள்
  வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே
  படைத்தனன் அமரர்தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன
  இயற்றினன் வெளிய யானை.



1

மலரினில் நீலவானில்
  மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகைஈசன்
  இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும்வீசி
  ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால்
  அனைத்தையும் நுகருமாறே.




2


மன்னர்மா ளிகையில் ஏழை
  மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசுவீசி
  உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி
  நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான்
  புவிப்புகழ் போதுமென்பான்.



3

அரம்பைஊர் வசிபோ லுள்ள
  அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!
  செய்தொழில் ஒப்புநோக்க
விரும்பியே கொல்லாம் இன்று
  விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு
  அழிதலங் கறிவை திண்ணம்.



4

காலவான் போக்கில் என்றுங்
  கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து
  குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றிஒர்நாட்
  செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம்
  நவின் றிடற் கரிய தன்றோ?



5