பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

கண்ணன் பாட்டு

கண்ணன் -- என் தந்தை

[நொண்டிச்சிந்து -- ப்ரதான ரஸம் அத்புதம்]


பூமிக் கெனை யனுப்பினாள்; -- அந்தப்
புதமண்ட லத்திலென் தம்பிகளுண்டு;
நேமித்த நெறிப்படியே -- இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளிலெல்லாம் -- மனம்
போலவிருந் தாளுபவர் எங்களினத்தார்;
சாமி இவற்றினுக்கெல்லாம் -- எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறிதுரைப்பேன்.
1

செல்வத்திற்கோர் குறையில்லை; -- எந்தை
சேமித்து வைத்தபொன்னுக் களவொன்றில்லை;
கல்வியில் மிகச்சிறந்தோன் -- அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கிலில்லை;
பல்வகை மாண்பினிடையே -- கொஞ்சம்
பயித்திய மடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி செல்லுபவரை -- மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு.
2

நாவு துணிகுவதில்லை -- உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே -- எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர்புனைந்தே -- அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே -- அவன்
செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.
3

பிறந்தது மறக்குலத்தில்; -- அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; -- சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமைகொண்டான்; -- அவன
நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்;
துறந்த நடைகளுடையான்; -- உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
4

ஏழைகளைத் தோழமைகொள்வான்; -- செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்;
தாழவருந் துன்பமதிலும் -- நெஞ்சத்
தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தியுடையான்; -- ஒரு
நாளிருந்தபடி மற்றொர் நாளினிலில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; -- பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப்பான்.
5

இன்பத்தை இனிதெனவும் -- துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை;
அன்பு மிகவுமுடையான்; -- தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே
வன்புகள் பலபுரிவான்; -- ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்ததனையே -- பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டிவிடுவான்.
6

வேதங்கள் கோத்துவைத்தான்; -- அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை;
வேதங்க ளென்றுபுவியோர் -- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற்றுள்ளே -- அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றியொன்றில்லை -- இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்
7

நாலு குலங்கள் அமைத்தான்; -- அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்;
சீலம் அறிவுகருமம் -- இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே -- வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியையெல்லாம் -- இன்று
பொசுக்கிவிட் டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்
8

வயது முதிர்ந்துவிடினும் -- எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை, மூப்புமில்லை, -- என்றும்
சோர்வில்லை, நோயொன்று தொடுவதில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, -- எவர்
பக்கமுநின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
நயமிகத் தெரிந்தவன்காண்; -- தனி
நடுநின்று விதிச்செயல் கண்டுமகிழ்வான்.
9

துன்பத்தில் நொந்துவருவோர் -- தன்னைத்
தூவென் றிகழ்ந்துசொல்லி வன்புகனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; -- துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

பு{[பாட பேதம்]: ‘தம்மைத்’ -- கவிமணி}

என்புடை பட்டபொழுதும் -- நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணுபவர்க்கே -- என்றும்
இன்பமிகத் தருவதில் இன்பமுடையான்.
10