பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


கண்ணன் பாட்டு


கண்ணன் -- என் விளையாட்டுப் பிள்ளை

(கேதாரம் -- கண்டஜாதி -- ஏகதாளம். ரசங்கள்: அற்புதம், சிருங்காரம்.)

தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
(தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்; -- பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் -- அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.
(தீராத)

1

தேனொத்த பண்டங்கள் கொண்டு -- என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் -- சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்.
(தீராத)

2

அழகுள்ள மலர்கொண்டு வந்தே -- என்னை
அழஅழச் செய்துபின், “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான் -- என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
(தீராத)

3

பின்னலைப் பின்னின் றிழுப்பான்; -- தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே -- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.
(தீராத)

4

புள்ளாங் குழல்கொண்டு வருவான்; -- அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே -- அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
(தீராத)

5

அங்காந் திருக்கும்வாய் தனிலே -- கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ? -- கண்ணன
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ?
(தீராத)

6

பு{[மு. -- ப.]: பெண்ணடீ}


விளையாட வாவென் றழைப்பான்; -- வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்: -- எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்.
(தீராத)

7

அம்மைக்கு நல்லவன், கண்டீர்! -- மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் -- வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.
(தீராத)

8

கோளுக்கு மிகவும் சமர்த்தன்; -- பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் -- தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான்.
(தீராத)

9