பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


கண்ணன் பாட்டு


கண்ணம்மா -- என் குழந்தை

(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
ராகம் -- பைரவி தாளம் -- ரூபகம்


ஸ ஸ ஸ -- ஸா ஸா -- பபப
தநீத -- பதப -- பா
பபப -- பதப -- பமா -- கரிஸா
ரிகம --ரிகரி -- ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.


சின்னஞ் சிறுகிளியே, -- கண்ணம்மா!
    செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே -- உலகில்
    ஏற்றம் புரியவந்தாய்!

1
பிள்ளைக் கனியமுதே, -- கண்ணம்மா!
    பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே -- என் முன்னே
    ஆடிவருந் தேனே!
2

பு{[மு-ப.]: ஸ ஸ ஸ -- ஸா ஸா ஸா -- ப ப பா}

ஓடி வருகையிலே, -- கண்ணம்மா!
    உள்ளங் குளிரு தடீ;
ஆடித்திரிதல் கண்டால் -- உன்னைப்போய்
    ஆவி தழுவு தடீ.

3

உச்சி தனை முகந்தால் -- கருவம்
    ஓங்கி வளரு தடீ;
மெச்சி யுனையூரார் -- புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்கு தடீ.

4

கன்னத்தில் முத்தமிட்டால் -- உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளு தடீ;
உன்னைத் தழுவிடிலோ, -- கண்ணம்மா!
    உன்மத்த மாகு தடீ.

5

சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
    சஞ்சல மாகு தடீ;
நெற்றி சுருங்கக் கண்டால் -- எனக்கு
    நெஞ்சம் பதைக்கு தடீ

6

உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
    உதிரங் கொட்டு தடீ;
என்கண்ணில் பாவையன்றோ? -- கண்ணம்மா!
    என்னுயிர் நின்ன தன்றோ?

7

சொல்லு மழலையிலே, -- கண்ணம்மா!
    துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே -- எனது
    மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

8

இன்பக் கதைக ளெல்லாம் -- உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -- உனைநேர்
    ஆகுமொர் தெய்வ முண்டோ?

9

மார்பில் அணிவதற்கே -- உன்னைப்போல்
    வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -- உன்னைப்போல்
    செல்வம் பிறிது முண்டோ?
10