பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


துரியோதனன் சபை

கன்னங் கரியது வாய் -- அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்
துன்னற் கினியது வாய் -- நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெனும்
வன்னத் திருநதி யின் -- பொன்
மருங்கிடைத் திகழ்ந்தஅம் மணிநகரில்,
மன்னவர் தங்கோ மான் -- புகழ்
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.
15

துரியோ தனப்பெய ரான், -- நெஞ்சத்
துணிவுடை யான், முடி பணிவறி யான்,
‘கரியோ ராயிரத் தின் -- வலி
காட்டிடு வான்’ என்றக் கவிஞர்பி ரான்
பெரியோன் வேதமுனி -- அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனினும் -- பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான்,
16

தந்தைசொல் நெறிப்படி யே, -- இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்.
மந்திர முணர்பெரி யோர் -- பலர்
வாய்த்திருந் தார் அவன் சபைதனிலே,
அந்தமில் புகழுடை யான், -- அந்த
ஆரிய வீட்டுமன், அறம் அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர் -- பழ
மறைக்குல மறவர்கள் இருவரொ டே,
17

மெய்ந்நெறி யுணர்விது ரன் -- இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும் -- அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்;
மைந்நெறி வான்கொடை யான், -- உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான் -- இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்.
18