பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

துரியோதனன் தீ மொழி

வேறு

பாம்பைக் கொடியென் றுயர்த்தவன் -- அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்: -- ‘அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய் -- திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்? -- கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான் -- சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்; -- அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான், -- திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான்.
86

“மன்னர்க்கு நீதி யொருவகை -- பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை” -- என்று
சொன்ன வியாழ முனிவனை -- இவன்
சுத்த மடையனென் றெண்ணியே, -- மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான், -- உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான், -- அவர்
சின்ன முறச்செய வேதிறங் -- கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்;
87


‘இந்திர போகங்க ளென்கிறான், -- உண
வின்பமு மாதரி னின்பமும். -- இவன
மந்திரமும் படை மாட்சியும் -- கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணி லே -- பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே -- உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்; -- மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே -- எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லை, காண்!
88

‘மாதர்தம் இன்பம் எனக்கென்றான், -- புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்; -- நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான், எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்; -- அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் -- வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ? -- உயிர்ச்
சோதரர் பாண்டவர், தந்தைநீ -- குறை
சொல்ல இனியிட மேதையா!
89


‘சொல்லின் நயங்கள் அறிந்திலேன், -- உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்; -- கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ? -- நினைக்
காரணங் காட்டுத லாகுமோ? -- என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும், -- நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன்; -- அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் -- கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்;
90

‘வாது நின்னோடு தொடுக்கிலேன்; -- ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்: -- ஒரு
தீது நமக்கு வாராமலே -- வெற்றி
சேர்வதற் கோர்வழி யுண்டு, காண்! -- களிச்
சூதுக் கவரை யழைத்தெலாம் -- அதில்
தோற்றிடு மாறு புரியலாம்; -- இதற்
கேதுந் தடைகள்சொல் லாமலே -- என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்.’
91