பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

தருமபுத்திரன் தீர்மானம்

தருமனும் இவ்வளவில் -- உளத்
தளர்ச்சியை நீக்கியொர் உறுதிகொண்டே
பருமங் கொள் குரலினனாய் -- மொழி
பதைத்திட லின்றிஇங் கிவைஉரைப்பான்:
‘மருமங்கள் எவை செயினும், -- மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்,
கருமமொன் றேஉளதாம் -- நங்கள்
கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம்.
130

‘தந்தையும் வரப்பணிந்தான்; -- சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத்தான்;
சிந்தையொன்றினிஇல்லை’ -- எது
சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டேன்.
முந்தையச் சிலைராமன் -- செய்த
முடிவினை நம்மவர் மறப்பதுவோ?
நொந்தது செயமாட்டோம்; -- பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல்வோம்.
131

‘ஐம்பெருங் குரவோர்தாம் -- தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறியோ?
வெம்பெரு மதயானை -- பரி
வியன்தேர் ஆளுட னிருதினத்தில்
பைம்பொழில் அத்திநகர் -- செலும்
பயணத்திற் குரியன புரிந்திடுவாய்,
மொய்ம்புடை விறல்வீமா!’ -- என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான்.
132