பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

கண்ணம்மா (3)


  காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
  காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
  தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
  வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
  மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
  வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
  வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
  விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக்
(காற்று வெளி) 1

  நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
  நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
  போயின, போயின துன்பங்கள் -- நினைப்
  பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
  வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
  மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
  தீயினி லேவளர் சோதியே -- என்றன்
  சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக்
(காற்று வெளி) 2