பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்



பல்வகைப் பாடல்கள்

அந்திப்பொழுது


காவென்று கத்திடுங் காக்கை -- என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.
மேவிப் பலகிளை மீதில் -- இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே
கூவித் திரியும் சிலவே; -- சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -- விண்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.
1

தென்னை மரக்கிளை மீதில் -- அங்கோரை
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.
சின்னஞ் சிறிய குருவி -- அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.
மன்னப் பருந்தொரிரண்டு -- மெல்ல
வட்டமிட் டுப்பின் நெடுந்தொலை போகும்.
பின்னர் தெருவிலொர் சேவல் -- அதன்
பேச்சினி லே “சக்தி வேல்” என்று கூவும்.
2

செவ்வொளி வானில் மறைந்தே -- இளந்
தேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்.
இவ்வள வான பொழுதில் -- அவள்
ஏறிவந் தேயுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச, -- விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.
செவ்விது, செவ்விது, பெண்மை! -- ஆ!
செவ்விது, செவ்விது, செவ்விது, காதல்.
3

காதலி னாலுயிர் தோன்றும்; -- இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காதலி னாலறி வெய்தும், -- இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -- பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்; -- அவள்
வீணைக் குரலிலோர் பாட்டிசைத் திட்டாள்.
4

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்.
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.
5