பல்வகைப் பாடல்கள்
|
|
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளியுண்டாம்; -- பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம்; -- பெண்ணே! |
1 |
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ்சுடராம்; -- பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ்சுடராம்; -- பெண்ணே! |
2 |
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்ற முறுஞ்சுடராம்; -- பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்னரிடுஞ்சுடராம்; -- பெண்ணே! |
3 |
பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்; -- பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன்றென்பதைக்
காண வொளிர்ச்சுடராம்; -- பெண்ணே! |
4 |