கண்ணிகள்
|
வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லற நீ கூறுதிகாண்,
|
1 |
விரிந்த பெரும்புறங்கள் மேலெறிந்துன் பேயலைகளை
பொருந்து மிடையே புதைத்த பிளவுகள்தாம்,
|
2 |
பாதலம்போ லாழ்ந்திருப்பப் பார்க்கவரி தாயவற்றினை
மீதலம்பி நிற்குமொரு வெள்ளைச் சிறு தோணி.
|
3 |
கடல் போதனை முழங்குதல்
|
“ஏனடா நீ கரையி லேக்குற்று நிற்கின்றாய்,
வானளா வென்திரைகள் வாளாதான் காண்பானாய்?
|
4 |
புன்படகு காணாய் புடைக்கு மென்றன வார் திரைமேலி
துன்பமிலா தேமிதந்து துள்ளிவிளை யாடுவதே.
|
5 |
அல்லா திதுவீழ்ந் தழிந்தாலும், என்னேகாண்?
பல்லா யிரமிதுபோற் பார்மிசைவே றுள்ளனவே.
|
6 |
சூழு மெனததிர்ச்சிக் கஞ்சேல், துணிக நீ!
ஏழைக் கரையி லிருப்ப தெளிமையடா.
|
7 |
வாராய், இடுக்கணினு மாறியதை யெற்றலினும்
பாராய், நல் லின்பப் பரவசமுண் டென்பதையே.”
|
8 |
மனிதன் மறுமொழி
|
என்று முழங்கி யழைக்கும் இருங்கடலே
நன்று நீ சொல்லினை காண், நான்வருவே னிக்கணமே.
|
9 |
நின்னில் வலியேன், நினதுதிரை வென்றிடுவேன்.
முன்னி யவற்றின் முடியேறி மேலெழுங்கால்,
|
10 |
வானகத்தோ டாடல் செயவாய்க்குங் காண்; மூழ்குறினும்
யான கத்தே பேரொலிக்கீ ழுள்ள தறிகுவனால்.
|
11 |
அபாயங்கள் ஈசனால் நன்மையின் பொருட்டுத் தரப்பட்டவை
|
அபாயமிலா திக்கரையி லார்ந்திருப்போரீசனும்
உபாய மறியாத வூமரன்றோ ஓர்ந்திடுங்கால்.
|
12 |
ஆழவுயிர் மானுடனுக் கையன் அருளிப்பின்
வாழி சிவத் தன்மை யதற்கிலக்கா வைத்தனனே.
|
13 |
ஆதலாற் கோடி யபாயமிடை யூறெல்லாம்
மோது கடல்களைப்போல் முன்னரிட்டா னவ்வுயிர்க்கே.
|
14 |
துன்பமருள் செய்தான் தோல்வி தனையளித்தான்.
மன்பதையின் கால்சூழ வைத்தான் வலைத்திரளே.
|
15 |
நெற்றிமேல் மேகத்து மின்னடிகள் நேர்வித்தான்.
எற்றியெமை வீழ்த்தப் பெருங்காற் றியற்றினனே.
|
16 |
இங்கு மனிதன்வரும் இன்னலெலா மாற்றியெதிரே
பொங்கு மிடுக்கணெலாம் போழ்ந்துவெற்றி கொள்கெனவே.
|
17 |
விதிதா னெதிர்த்துவர வெல்லொணாத் தன்னுயிரை
மதியா ததிற்றாக்கி மைந்தன்விஜயம் பெறவே.
|
18 |
முடிவுரை
|
ஏற்றிடுவா யென்னை யிருங்கடலே நின்மீது
தோற்றிடா தேறிப்போய் வானுலகு துய்ப்பேன்யான்.
|
19 |
வாரிதியாங் கோளரியே வந்துன் பிடர் பிடித்துப்
பாருன்னை யென்னில் வசப்படுத்தும் பண்பினையே.
|
20 |
அல்லது நும்மால் அகழ்ப்பா தலங்களினும்
பொல்லாக் குகையினும்யான் போய் வீழ்ந்துவிட்டாலும்,
|
21 |
அங்கிருந்துன் பார மனைத்தும் பொறுத்துவித்து
மங்கி யழியும் வகைதேட வல்லேன் காண்.
|
22 |
தளையறியா வார்கடலே நின்னோடு சாடி
அளவறிவே னென்றன் பெரியவுயி ராற்றலுக்கே. |
23 |