பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


கடல்

[ஸ்ரீ மான் அரவிந்த கோஷ் ‘கடலுக்கு’ என்ற தலைப்பின்கீழ் ஆங்கில
பாஷையில் சில கண்ணிகள் புனைந்து அவற்றை ‘மாடர்ன் ரெவியூ’ (நவீன பரிசோதகம்) என்ற கல்கத்தா மாதப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன்.

தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற் சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப் போல், அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது. இதில் எனக்குத் தெரிந்தே பல வழுக்கள் இருக்கின்றன. பாஷை வேறுபாடு முதலிய சில காரணங்களால் இவ் வழுக்களை நிவர்த்தி செய்வது மிகக் கஷ்டமாயிருக்கிறது. இவற்றையும், எனக்குத் தெரியாமல் வீழ்ந்திருக்கும் பிழைகளையும் கற்றோர் பொறுத்தருளுமாறு வேண்டுகின்றேன்.

இச் சரிதையில் ஸ்ரீ அரவிந்தர் கடல் என்று எதைக் கூறுகிறார்? மானிட வாழ்க்கையை, சங்கடங்களும் துன்பங்களும் விரோதங்களும் எதிர்ப்புகளும் நிறைந்த சம்சாரத்தையே கடல் என்கிறார். ஆத்மா இவற்றிடையே விழுந்து, இவற்றால் மோதுண்டு, தான் இவற்றை மோதி, தனக்குக் கீழ்ப்படுத்தி வெற்றி ‘கொண்டால் ஆத்ம சித்தியும் ஞானமும் ஏற்படும். அபாயங்களைக் கண்டு விலகி நிற்பவன் மூடன். அவற்றை எதிர்த்து, அமுக்கிக் கீழ்ப்படுத்தி வெற்றிகொள் மானிடா, இதன் பொருட்டாகவே உன்னை ஈசன் இங்கு அனுப்பி யிருக்கிறான்.

27. ஆதாரம்: பாரதி புதையல் 3 பக்கம் 1-4
புதுவை ‘இந்தியா’ இதழ்: 12-6-1909

இக் கொள்கை, பாட்டின் முதல் வரி முதலாகவே உள்ளே பொதிந்து கூடார்த்தமாகக் காணப்படுகிறது. இடையே ஓரிடத்தில் அரவிந்தர் அதை வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறார். இக் கருத்தை மனத்தில் வைத்துக்கொண்டு பாட்டை வாசித்துப் பார்த்தால்தான் உண்மைப் பொருள் விளங்கும். இம் மொழிபெயர்ப்பைச் சகல ஜனங்களுக்கும் தெளிவாகும்படி மிக எளிய நடையிலே அமைக்க வேண்டுமென்று சிரமப்பட்டிருக்கிறேன். என்னை யறியாமல் அகராதிப் பண்டிதர்களுடைய சில ‘கற் சற்’ மொழிகள் விழுந்திருக்கின்றன. செய்யுள் அமைதி நாடி அம்மொழிகளுக்கு எளிய பிரதி பதங்கள் போடாமல் இருந்து விட்டேன், இதன் பொருட்டும் படிப்போர்கள் க்ஷமிக்குமாறு பிரார்த்தனை செய்கிறேன். சி.சு. பாரதி]



கண்ணிகள்


வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லற நீ கூறுதிகாண்,
1

விரிந்த பெரும்புறங்கள் மேலெறிந்துன் பேயலைகளை
பொருந்து மிடையே புதைத்த பிளவுகள்தாம்,
2

பாதலம்போ லாழ்ந்திருப்பப் பார்க்கவரி தாயவற்றினை
மீதலம்பி நிற்குமொரு வெள்ளைச் சிறு தோணி.
3

கடல் போதனை முழங்குதல்


“ஏனடா நீ கரையி லேக்குற்று நிற்கின்றாய்,
வானளா வென்திரைகள் வாளாதான் காண்பானாய்?
4

புன்படகு காணாய் புடைக்கு மென்றன வார் திரைமேலி
துன்பமிலா தேமிதந்து துள்ளிவிளை யாடுவதே.
5

அல்லா திதுவீழ்ந் தழிந்தாலும், என்னேகாண்?
பல்லா யிரமிதுபோற் பார்மிசைவே றுள்ளனவே.
6

சூழு மெனததிர்ச்சிக் கஞ்சேல், துணிக நீ!
ஏழைக் கரையி லிருப்ப தெளிமையடா.
7

வாராய், இடுக்கணினு மாறியதை யெற்றலினும்
பாராய், நல் லின்பப் பரவசமுண் டென்பதையே.”
8

மனிதன் மறுமொழி


என்று முழங்கி யழைக்கும் இருங்கடலே
நன்று நீ சொல்லினை காண், நான்வருவே னிக்கணமே.
9

நின்னில் வலியேன், நினதுதிரை வென்றிடுவேன்.
முன்னி யவற்றின் முடியேறி மேலெழுங்கால்,
10

வானகத்தோ டாடல் செயவாய்க்குங் காண்; மூழ்குறினும்
யான கத்தே பேரொலிக்கீ ழுள்ள தறிகுவனால்.
11

அபாயங்கள் ஈசனால் நன்மையின் பொருட்டுத் தரப்பட்டவை


அபாயமிலா திக்கரையி லார்ந்திருப்போரீசனும்
உபாய மறியாத வூமரன்றோ ஓர்ந்திடுங்கால்.
12

ஆழவுயிர் மானுடனுக் கையன் அருளிப்பின்
வாழி சிவத் தன்மை யதற்கிலக்கா வைத்தனனே.
13

ஆதலாற் கோடி யபாயமிடை யூறெல்லாம்
மோது கடல்களைப்போல் முன்னரிட்டா னவ்வுயிர்க்கே.
14

துன்பமருள் செய்தான் தோல்வி தனையளித்தான்.
மன்பதையின் கால்சூழ வைத்தான் வலைத்திரளே.
15

நெற்றிமேல் மேகத்து மின்னடிகள் நேர்வித்தான்.
எற்றியெமை வீழ்த்தப் பெருங்காற் றியற்றினனே.
16

இங்கு மனிதன்வரும் இன்னலெலா மாற்றியெதிரே
பொங்கு மிடுக்கணெலாம் போழ்ந்துவெற்றி கொள்கெனவே.
17

விதிதா னெதிர்த்துவர வெல்லொணாத் தன்னுயிரை
மதியா ததிற்றாக்கி மைந்தன்விஜயம் பெறவே.
18

முடிவுரை


ஏற்றிடுவா யென்னை யிருங்கடலே நின்மீது
தோற்றிடா தேறிப்போய் வானுலகு துய்ப்பேன்யான்.
19

வாரிதியாங் கோளரியே வந்துன் பிடர் பிடித்துப்
பாருன்னை யென்னில் வசப்படுத்தும் பண்பினையே.
20

அல்லது நும்மால் அகழ்ப்பா தலங்களினும்
பொல்லாக் குகையினும்யான் போய் வீழ்ந்துவிட்டாலும்,
21

அங்கிருந்துன் பார மனைத்தும் பொறுத்துவித்து
மங்கி யழியும் வகைதேட வல்லேன் காண்.
22

தளையறியா வார்கடலே நின்னோடு சாடி
அளவறிவே னென்றன் பெரியவுயி ராற்றலுக்கே.
23