பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

அக்னி பகவான்

யாகப் பாட்டு

[ராகம் -- புன்னாகவராளி]



பல்லவி

தீ வளர்த்திடுவோம் -- பெருந்
வளர்ந்திடுவோம் தீ


சரணங்கள்

ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் -- விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் -- களி
ஆவல் வளர்த்திடுவோம் -- ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை -- விண்ணோர்தமைத்
தேனுக் கழைப்பவனைப் -- பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
   1

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை -- நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை-பல
சீர்க ளுடையவனைப் -- புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை -- உருத்திரன்
அன்புத் திருமகனை -- பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
2

கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை -- எம்மைக்
காவல் புரிபவனைத் -- தொல்லைக்
காட்டை யழிப்பவனைத் -- திசை
எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே -- புவிமிசை
இன்பம் பெருகிடவே -- பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
3

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை -- உயிர்
நீளத் தருபவனை -- ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை -- நித்தம்
அஞ்ச லஞ்சேலென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப்-பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் -- பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
4

அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் -- செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் -- தடை
யற்ற பெருந்திறலை -- எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதொர் நல்லறமும் -- கலந்தொளி
ஏறுந் தவக்கனலைப் -- பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்.
(தீ)
5

வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக் -- கவி
வாணர்க்கு நல்லமுதைத் -- தொழில்
வண்ணந் தெரிந்தவனை -- நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும் -- இங்கே யுண்டு
தேக்கிக் களிப்பவனைப் -- பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
6

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர் -- இன்பந்
தேக்கிடுந் தேனிசைகள் -- சுவை
தேறிடு நல்லிளமை-நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும் -- இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் -- பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்--வாரீர்.
(தீ) 7