பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்


தோத்திரப் பாடல்கள்

காணி நிலம்


காணி நிலம்வேண்டும், -- பராசக்தி
காணி நிலம்வேண்டும்; -- அங்குத்
தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -- அந்தக்
காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; -- அங்குக்
கேணி யருகினிலே -- தென்னைமரம்
கீற்று மிளநீரும்,

1

பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்
பக்கத்திலே வேணும்; -- நல்ல
முத்துச் சுடர்போலே -- நிலாவொளி
முன்பு வரவேணும்;-அங்குக்
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற் படவேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
2

[பாட பேதம்]:
‘வாச்வினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி’
என்பது ஒரு பிரதியில்

‘இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி என்ற வரியை அடுத்து காணப் படுகிறது.

-- கவிமணி

பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்
கூட்டுக் களியினிலே -- கவிதைகள்
கொண்டு தரவேணும்; -- அந்தக்
காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்
காவ லுறவேணும்; -- என்றன்
பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.







3