பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

மஹாசக்தி


சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரி யங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்,

(சந்) 1

[பாட பேதம்]: ‘சந்திரிகையி லவளை கண்டேன்’

-- 1910 ஆம் வருடப் பதிப்பு.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரி லாதெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.
(சந்) 2

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.
(சந்) 3