பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்


தோத்திரப் பாடல்கள்

மஹாசக்திக்கு விண்ணப்பம்


மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்
  மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்
  சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்
  ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன
  யாவையும் செய்பவளே!
1

பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்
  பாரத்தைப் போக்கிவிடு்
சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்
  செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே -- நெல்லாமென
  எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று
  இயங்கி யிருப்பவளே.
2

கள்ளம் உருகாதோ -- அம்மா
  பக்திக் கண்ணீர் பெருகாதோ?
உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ
  ஊனம் ஒழியாதோ?
வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு
  வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே -- அனைத்திலும்
  மேவி யிருப்பவளே!
3

[பாட பேதம்]:
1. ‘யாவையும் செய்தவளே’
2. ‘உள்ளத் தெளியாதோ’
-- 1910 ஆம் வருட பதிப்பு.