வேதாந்தப்
பாடல்கள்
|
பரசிவ வெள்ளம்
|
உள்ளும் புறமுமாய்
உள்ளதெலாந் தானாகும்
வெள்ள மொன் றுண்டாமதனைத்
தெய்வமென்பார் வேதியரே. |
1 |
காணுவன நெஞ்சிற்
கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும்
பிறப்பதந்த வெள்ளத்தே. |
2 |
எல்லைபிரி வற்றதுவாய்
யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர்
என்றுமய லெய்துவதாய். |
3 |
வெட்டவெளி யாயறிவாய்
வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள்
கூட்டிப் பிரிப்பதுவாயை |
4 |
தூல வணுக்களாய்ச்
சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த்
தன்மையெலாந் தானாகி |
5 |
தன்மையொன்றி லாததுவாய்த்
தானே ஒரு பொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த்
தான்பலவாய் நிற்பதுவே. |
6 |
எங்குமுளான் யாவும்வலான்
யாவுமறி வானெனவே
தங்கு பலமதத்தோர்
சாற்றுவதும் இங்கிதையே. |
7 |
வேண்டுவோர் வேட்கையாய்
வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை
யீட்டுவதாய் நிற்குமிதே.
|
8 |
காண்பார்தங் காட்சியாய்க்
காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,
வகுத்துரைக்க வொண்ணாதே. |
9 |
எல்லாந் தானாகி
யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர்ரென்பர்
வாய்மையெல்லாங் கண்டவரே. |
10 |
மற்றிதனைக் கண்டார்
மலமற்றார் துன்பமற்றார்
பற்றிதனைக் கொண்டார்
பயனனைத்துங் கண்டாரே. |
11 |
இப்பொருளைக் கண்டார்
இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம்பெற்றிங்
கின்பநிலை யெய்துவரே. |
12 |
வேண்டுவ வெலாம் பெறுவார்
வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை
யீசரெனப் போற்றுவரே. |
13 |
ஒன்றுமே வேண்டா
துலகனைத்தும் ஆளுவர்காண்
என்றுமே யிப்பொருளோ
டேகாந்தத் துள்ளவரே. |
14 |
வெள்ளமடா தம்பி
விரும்பியபோ தெய்திநின
துள்ளமிசைத் தானமுத
வூற்றாய்ப் பொழியுமடா. |
15 |
யாண்டுமிந்த இன்பவெள்ளம்
என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம்
மிகவுமெளி தாகுமடா. |
16 |
எண்ணமிட்டா லேபோதும்
எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே
ததும்பப் புரியுமடா. |
17 |
எங்கு நிறைந்திருந்த
ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப்
போற்றி நின்றாற் போதுமடா. |
18 |
யாதுமாம் ஈசவெள்ளம்
என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை
உள்ளுவதே போதுமடா. |
19 |
காவித் துணிவேண்டா
கற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும்
பரமநிலை யெய்துதற்கே. |
20 |
சாத்திரங்கள் வேண்டா
சதுமறைக ளேதுமில்லை
தோத்திரங்க ளில்லையுளந்
தொட்டுநின்றாற் போதுமடா. |
21 |
.தவமொன்று மில்லையொரு
சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதெனச்
சிந்தைசெய்தாற் போதுமடா. |
22 |
சந்ததமு மெங்குமெல்லாந்
தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று
வாய்சொன்னாற் போதுமடா. |
23 |
.நித்தசிவ வெள்ளமென்னுள்
வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்
சிரத்தை யொன்றே போதுமடா. |
24 |