கருநட இசையும் தமிழர் கண்டதே!
பல்லிசை கட்கும் வடக்குப் பாவிகள்
இழிந்ததம் வடசொற் பெயரை இட்டனர்.
ஏழிசை வடவர் கண்டிலர்; அன்றியும்
யாழிசை அறியார்; குழிலிசை அறியார்;
இனிமை தோன்றப் பாடுதல் அறியார்;
ஆதியே தமிழர் அறிந்தவர் இவைகள்,
ஆரிய மறையில் அமைந்த தொன்று
சாமம் பெயரால் சாற்றும் முறையைக்
கேட்டறியாத நாட்டு மக்கள்
கோயிலின் தேர்விழாக் கூட்ட நடுவில்
தவளைகத்துவதையும், நாய்குறைப்பதையும்
கேட்டுக் காது கிழிபட் டிருப்பார்;
அதுதான் அவர்இசை; சாம வேதம்!
ஓவியம் தமிழர் உளத்தின் வளர்ச்சியே!
ஆரியர் ஓவியம் அறியார்! மற்றும்
தச்சும் முதன்முதல் தமிழன் கண்டதே!
படமயில் ஆடும்; பார்த்த ஓவியன்
நடஅர சென்று வரைந்து நல்குவான்;
நல்கிய அதற்குப் புல்லுடைப் பார்ப்பான்
அதுதான் கடவுள் அதற்குயிர் தருவேன்
என்பான்; தமிழனும் ஆம்ஆம் என்பான்.
மருந்து தருவோர் மருத்துவம் என்பதும்
இருந்து பார்ப்பான் இங்குக் கற்றதே
இன்னும் ஓன்றையும் இயம்புவேன் கேட்க,
வேட்டி யைக்கீழ்ப் பாய்ச்சிக் கட்டுகை
அதுவும் பார்ப்பானுக் கமைந்த வழக்கம்,
வேண்டாம் என்று விளம்புவான் ஒரு பயல்.
வேட்டி, சட்டை, காசு, மெய்ப்பை
இவைஎலாம் தமிழ்ப்பெயர்! பண்டே கண்டவை!
காற்சட்டைஎன மேற்சட்டைஎன
இப்போ திருப்பவை, அப்போ திருந்தவை;
தமிழன் உடைமையை வடவன் உடைமைஎன்று
தமிழனே ஆக்கித் தலைகவிழ்கின்றான்;
இந்நாள் தமிழில் இருக்கும் எண்களை
அந்நாள் அரபியர், ஆங்கில மக்கள்
எடுத்தாண்டார்கள்! இதைஆராய்க!
தமிழில் ஒன்று மில்லை என்றும்.
தமிழில் இலக்கியம் இல்லை என்றும்,
தமிழைத் தொலைக்க வேண்டும் என்றும்,
கூறும் குறுகிய கொள்கை உடையோர்
எல்லாம் வடவர் சொத்தே என்று
சொல்லுவது நாளைய பிணஞ்சொல்லுவதே.
|
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 ) |