குடும்ப
விளக்கு
(இரண்டாம் பகுதி - விருந்தோம்பல் )
சிந்துகண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்
|
அன்பு மணவாளன்
ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
பேச்சருந்தித் - தன்புதுச்
சட்டை யுடுத்துத்
தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
படியணிந்து - வட்டநிலைக்
கண்ணாடி பார்த்துக்
கலைந்த முடியொதுக்கிக்
''கண்ணேசெல் கின்றேன்
கடைக்'' கென்றான் - பெண்வாய்க்
கடைவிரித்துப் புன்னகைப்புக்
காட்டி ''நன்''றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
கொண்டே - நடை விரித்தான். |
( 5 )
( 10 )
( 15 ) |
தலைவி விருந்தினரை வரவேற்றாள்
|
தன்னருமை மக்கள்
தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
பெண்ணரசி - முன்சுவரில்
மாட்டி யிருந்த
மணிப்பொறி ''இரண்டென்று''
காட்டி யிருந்ததுவும்
கண்டவளாய்த் - தீட்டிச்
சுடுவெயிலில் காயவைத்த
சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
உவந்தாள் - நடைவீட்டைத்
தாண்டி வரும்விருந்தைத்
தான்கண்டாள் கையேந்திப்
பூண்ட மகிழ்வால்
புகழேந்தி - வேண்டி
''வருக! அம் மாவருக!
ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி''
யென்று - பெருகன்பால்
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக - நன்றே
வரவேற்றாள்; வந்தவரின்
பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
அமைத்தாள் - விரைவாக
அண்டாவின் மூடி
அகற்றிச்செம் பில்தண்ணிர்
மொண்டுபுறந் தூய்மை
முடிப்பிரென்று - விண்டபின்
சாய்ந்திருக்க நாற்காலி
தந்தும்வெண் தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
மற்றதிலே - ஏய்ந்திருக்க
வெள்ளையுறை யிட்டிருக்கும் மெத்தை தலையணைகள்
உள்ளறையில் ஓடி
யெடுத்துதவி - அள்ளியே
தேன்குழலும் உண்ணத்
தெவிட்டாத பண்ணியமும்
வான்குழலாள் கொண்டுவந்து
வைத்தேகி - ஆன்கறந்த
பாலும் பருகும்
படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
நறுக்கியகாய் - மேலுமிட்டுச்
செந்தாழை, பல்பூக்கள்
பச்சையொடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
மற்றவர்க்கும் - தந்துபின்
நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான் திறந்(து)
இன்று மலர்ந்த
இலக்கியங்கள் - தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள்
நல்கி, ''இதோ வந்தேன்''
என்று சமைக்கும்
எதிர் அறைக்குள் சென்றவளை
|
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
|
விருந்தினர்
வரவை மாமன் மாமிக்கு!!
|
வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க,
''எந்தாயே எந்தாயே
யாமெல்லாம் - குந்தி
விலாப்புடைக்க வீட்டில் இந்த
வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர் - நிலாப்போலும்
இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையுமுண்டோம்
எப்போதுதான் அமைதி''
என்றுரைக்க - ''அப்படியா!
சற்றே விடைதருவீர்
தங்களருந் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
மாமியர்பால் - உற்ற செய்தி
சொல்லிவரு வேன்'' என்று
தோகை பறந்தோடி
மெல்ல ''மாமன் மாமி
வில்லியனூர்ச் -செல்வர்திரு
மாவரச னாரும்
மலர்க்குழலி அம்மாவும்
நாவரசும் பொண்ணாள்
நகைமுத்தும் - யாவரும்
வந்துள்ளார்'' என்றுரைத்தாள்
மாமனார் கேட்டவுடன்.
|
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
|
''வந்தாரா? மிக்க
மகிழ்ச்சியம்மா - வந்தவரைக்
காணவோ கண்டு
கலகலெனப் பேசவோ
வேணவா உற்றேன்
விளைவதென்ன! - நாணல்
துரும்பென்றும் சொல்லவொண்ணா
என்றன் உடம்பை
இரும்பென்றா எண்ணுகின்றாய்
நீயும் - திரும்பிப்போய்க்
கேட்டுக்கொள் நான் அவரை
மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்க வந்த
விருந்தோம்பு; - நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்தபுகழ்
ஞாலத்தில் என்னவெனில்
உற்றவிருந்தை
உயிரென்று - பெற்றுவத்தல்;
மோந்தால் குழையும்அனிச்
சப்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும்
வருவிருந்தென்(று) - ஆய்ந்ததிரு
வள்ளுவனார் சொன்னார்
அதனை நீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்
ஒருபோதும் - தள்ளாதே!
ஆண்டு பலமுயன்றே
ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும்
இட்டுவத்தல் - வேண்டுமன்றோ?
வந்தாரின் தேவை
வழக்கம் இவைஅறிக,
நந்தா விளக்குன்றன்
நல்லறிவே! செந்திருவே!
இட்டுப்பார் உண்டவர்கள்
இன்புற்று இருக்கையிலே தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
தோன்றுமின்பம் - கட்டிக்
கரும்பென்பார் பெண்ணைக்
கவிஞரெலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினா
லன்றோ? - தெரிந்ததா?''
என்றுரைக்க, மாமி
இயம்பலுற்றாள் பின்னர்,
|
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 ) |
''முன்வைத்த முத்துத்
தயிரிருக்கும் - பின்னறையில்
பண்ணியங்கள் மிக்கிருக்கும்
பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
அளவிருக்கும் - கண்ணே
மறக்கினும் அம்மாவென்(று)
ஓதி மடிப்பால்
கறக்கப் பசுக்காத்
திருக்கும் - சிறக்கவே
சேலத்தின் அங்காடிச்
சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
மிகக்கருத்தாய் - தோலில்
கலந்த சுளைபிசைந்து
காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
இருக்கும் - மலிந்துநீர்
பாய்நாகர் கோவில்
பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே
பொன்போலே! - தேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல்
கொட்டிவைத்தேன், கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
வையாமைக் - குத்துன்பம்
உற்றிடச்செய்! ஊறுகாய்
ஒன்றல்ல கேட்பாய்நீ;
இற்றுத்தேன் சொட்டும்
எலுமிச்சை! வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும்
பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய்
மாறாமல் - நேருறவே
வெந்தயம் மணக்கஅதன்
மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் - நைத்திருக்கும்
காடி மிளகாய்
கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
மூடிவைத்தேன் - தேடிப்பார்
இஞ்சி முறைப்பாகும்
எலுமிச்சை சார்பாத்தும்
பிஞ்சுக் கடுக்காய்
பிசைதுவக்கும் - கொஞ்சமா?
கீரை தயிர்இரண்டும்
கேடுசெய்யும் இரவில
மோரைப் பெருக்கிடு
முப்போதும் - நேரிழையே
சோற்றை அள் ளுங்கால்
துவள்வாழைத் தண்டில்உறும்
சாற்றைப்போ லேவடியத்
தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை!
வாழை இலையின்அடி
உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக்
கறிவகைகள் - சூழவைத்துத
தண்ணீர்வெந் நீரைத்
தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோறிடுமுன்
மிகஇனிக்கும் - பண்ணியமும்
முக்கனியும் தேனில்
நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால்
சோறிட்டுத் - தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும்
கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
ஒண்டொடியே! - கேட்டுப்போ;
எக்கறியில் நாட்டம்
இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
அள்ளிவை - விக்குவதை
நீமுன் நினைத்து
நினைப்பூட்டு நீர் அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும் - தீமையம்மா!
பாய்ச்சும் பசும்பயற்றுப்
பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு
நீருக்கும் - வாய்ப்பாகத்
தூய சருகிலுறு
தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்ந்தே அவர் எழுமுன் - தாயே
அவர்கைக்கு நீர் ஏந்தி
நெய்ப்பசை யகற்ற
உவர்க்கட்டி தன்னை
உதவு - துவைத்ததுகில்
ஈரம் துடைக்கஎன
ஈந்து, மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே
ஒன்இலைகாய் - சேரவைத்து
மேல்விசிறி வீசுவிப்பாய்
மெல்லியலே! ' - என்றுரைத்தாள்.
|
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 ) |
கால்வலியும் காணாக்
கனிமொழியாள் - வேல்விழியை
மிக்க மகிழ்ச்சி
தழுவ விடைபெற்றுத்
தக்க விருந்தினர்பால்
தான்சென்றே - ' ஒக்கும்என்
அன்புள்ள அம்மாவே
ஐயாவே, அம்முதியோர்
என்பு மெலிந்தார்
எழுந்துவரும் - வன்மைஇலார்.
திங்களை அல்லி
அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்எனில்
தங்குவனோ - இங்கேழை?
பெற்ற பொழுது அன்பால்
பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
பார்க்கஅவா - முற்றாளா?
தாய்வந்தாள் தந்தைவந்தான்
என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாத்
தீர்வானோ - வாய் ஊறிப்
போனாரே தங்களது
பொன்வருகை கேட்டவுடன்
ஊன்உறுதி யில்லை
உமைக் காணக் - கூனி
வரஇயலா மைக்காக
மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
சாற்றி - வருந்தினார் ''
என்றுரைத்தாள் இல்லத்
தலைவி, இதுகேட்டு.
|
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 ) |
'' நன்றுரைத்தீர் நாங்கள்
போய்க்
காணுகின்றோம் ''' - என்றுரைத்தார்
அன்பு விருந்தினர்கள்
அங்கு வருவதனைத்
தன்மாமன் - மாமியார்பால்
சாற்றியே - பின்னர்
அறையை மிகத்தூய்மை
ஆக்கி, அமர
நிறையநாற் காலி
நெடும்பாய் - உறஅமைத்துச்
'' செல்லுக! நீர்'' என்றுரைத்தாள்
செல்வி ; விருந்தினர்கள்
சொல்லலுற்றார் சென்றே
வணக்கமென்று - சொல்லலுற்றார்.
|
( 285 )
( 290 )
|
விருந்தினரைக்
கண்ட முதியோர்
|
வந்த விருந்தினர்க்கு
வாழ்த்துரைந்துக் கையூன்றி
நொந்த படியெழுந்தார்
நோய்க்கிழவர் - அந்தோ! |
( 295 )
|
''படுத்திருங்கள் ஐயா
!
படுத்திருங்கள் அம்மா!
அடுத்திருந்து பேசல்
அமையும் - கடற்கிணையாம்
ஆண்டு பலவும்
அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்துத்
தள்ளாமை ஈண்டைந்தீர்!
சென்றநாள் என்னும்
செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
உருக்காட்டி - பின்மறையக
கண்டிருந்த தங்கள்
அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த செய்தி
பருகோமோ - மொண்டு மொண்டு!
வில்லியனூர் விட்டு
விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
மாட்டினால் - தொல்லை!
கறுப்புக்குத் தக்கதாய்க்
காளையொன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
பூட்டை - அறுத்தோடி
மூலைக் குளத்தண்டை
முள்வேலந் தோப்பினிலே
காலைப் பரப்பியது
கண்டுபின் - கோல்ஒடித்துக்
காட்டிப் பிடித்துவந்து
வண்டியிலே கட்டிநான்
ஓட்டிவந்தேன் ; இங்கே
உயர்வான - நாட்டுப்
புடவைபல தேவை
அதனால் புதுவைக்
கடைகளிலே வாங்கக்
கருதி - உடன்வந்தேன்'
என்றுரைத்துப்பின்னும்
இயம்புகையில், அவ்விடத்தில் |
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 ) |
தலைவி
விருந்துவந்த பெண்ணாளிடம்
|
நின்றிருந்த வீட்டின்
நெடுந்தலைவி - நன்றே
விருந்துவந்த பெண்பால்
விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
இருந்தாள் - பொருந்தவே. |
( 340 ) |
|
|
|