பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

கதை உறுப்பினர்

திரைய மன்னன் ... குறிஞ்சி திட்டின் அரசன்

மல்லிகை      ... குறிஞ்சித் திட்டின் அரசி

தாமரை       ... மல்லிகையின் தோழி

அறிவழகன்    ... அமைச்சன்

சேந்தன்      ... படைத் தலைவன்

செழியன்     ... சேந்தனின் தோழன்
நெடுமாறன்

வேலன்      ... மக்கள் தலைவர்கள்

திண்ணன்     ... மல்லிகையின் அண்ணன்! விளாமாவட்டத்தின் சிற்றரசன்

இளந்திரையன்  ... திரைய மன்னனின் மகன்

சில்லிமூக்கன்   ... தலைமைப் பணியாள்

தங்கவேல்    ... பணியாளின் மகன்

விநோதை    ... மன்னனால் அழைத்து வரப்பட்டவள்

அம்புயம், மடத்தலைவர்,

சிவாநந்தர், திருமாலடியார்,... விநோதையுடன்

சிவசம்பந்நர்.             வந்தவர்கள்

             நாட்டு மக்கள் தொழிலாளிகள்.

                       குறிஞ்சித் திட்டு

                         பிரிவு -- 1


இப்பகுதியில், குறிஞ்சித் திட்டு என்பது என்ன ? அதன் தன்மை என்ன?
மக்கள் நிலை,என்ன ? வாழ்க்கை எப்படி ? என்பவைகள் உயிரோவியமாகின்றன.

                      ( அறுசீர் விருத்தம் )

கடல்கொண்ட குமரி நாட்டில்
கடல் கொள்ளாக் குறிஞ்சித்திட்டு."
மிடல்கொண்டும், வேறு நாட்டார்
நெருங்கவே விடாமை கொண்டும்.
நடல்கொண்டும், விளைச்சல் கொண்டும்
நலங்கொண்டும், மகிழ்ச்சி கொண்டும்,
இடல்கொண்டும், அறமே கொண்டும்,
எல்லாங்கொண்டு திகழ்ந்ததங்கே.

பிறர் நாட்டைப் பிடித்துத் தாமே
பிழைக்கும்தீ யார்வி ழிக்கு
மறைவாக நடுக்க டற்கண்
மற்றிந்தக் குறிஞ்சி நாட்டை
நிறைநாட்கள் வாழும் வண்ணம்
நிறுவினாள் இயற்கை அன்னை
குறைவின்றித் தொன்மை போல
வாய்ந்தது குறிஞ்சித்திட்டு.

மதமில்லை குறிஞ்சித் திட்டில்
மதம்பெற்ற சாதி யில்லை!
இதுபொருள் என்று தச்சர்
ஈந்திட்ட உருவங் காட்டி
மதிமாய்க்கும் கோயி லில்லை!
ஆதலால் மக்கள் நெஞ்சில்
கொதிப்பில்லை; பொதுப் பணத்தைக்
கொள்ளைகொள்ளுவது மில்லை.

வேற்றுவர் படைஎ டுப்பு
விளைந்ததே இல்லை அங்கே!
மாற்றுவோம் தமிழ் ஒழுக்கம்
எனப்பிறர் வந்த தில்லை
ஏற்பவர் வந்த தில்லை;
இருப்பவர் ஆதலாலே!
சீற்றமே எவர்க்கும் இல்லை.
சிரிப்பிலா முகங்கள் இல்லை.

பிறர் நாட்டை எதிர்பார்க் கின்ற
பி்ற்போக்கு நிலை இல்லை.
பிறர் நாட்டைத் தாய்நா டென்பார்
உள்நாட்டில் பிழைப்ப தில்லை.
பிறமொழி தமிழிற் சேர்க்கும்
பேடிகள் நுழைந்த தில்லை.
அறமுதல் நான்கு கூறும்
தமிழ்முறை அலால்வேறில்லை.

ஏழாயி ரங்கல் என்று
பரந்தநல் குமரி நாட்டைப்
பாழாக்கி விழுங்கித் தீர்த்த
பழங்கடல் வெள்ளம் இந்த
வாழாது வாழ்கு றிஞ்சி
மண்ணினை நடுவில் விட்டுச்
சூழாது சூழ்ந்து சுற்றுக்
காவல்செய் திருந்ததன்றோ!

நடுலினில் நூறு கற்கள்
பரப்புள்ள நற்கு றிஞ்சி
படைகொண்டு வருவார் தம்மால்
பழிவாங்கப் படுவ தில்லை.
படைகொண்டு வருவார் வந்தால்
பாங்கெலாம் சுழல்கள் காண்பார்
அடியொடு மாள வேண்டும்
சுழல்களால் அடியில் மூழ்கி.

அயல்நாட்டார் குறிஞ்சித் திட்டை
அறியார்கள் அதுபோல் இத்தத்
துயரிலாக் குறிஞ்சி நாடும்
நம்நாட்டைத் துறந்து வேறோர்
புயல்நிகர் நாட்டு மண்ணைப்
போய்மிதித் ததுவும் இல்லை.
நயனுற ஆண்ட மன்னர்
நாலாயிரத்தார் ஆவர்.

எவர்படை எடுப்பும் இன்றி
இயற்கையால் வளர்ச்சி பெற்ற
நவையிலாக் குறிஞ்சித் திட்டு
நற்றமிழ் வளர்ச்சி பெற்றும்
கவிஞர்கள் பலரைப் பெற்றும்
கைத்தொழில் வளர்ச்சி பெற்றும்
குவிபுதுத் தொழில் கலைகள்
கொளப்பெற்றும் வந்ததாகும்,

இத்தனை பன்னூற் றாண்டாய்
இத்தனை மன்ன ரால்எள்
ளத்தனை குறைவி லாமல்
இயன்றஇக் குறிஞ்சி நாட்டில்
முத்தமிழ் நெறிபி ழைக்கும்
முட்டாளாய்த் 'திரைய மன்னன்'
தொத்தினான் ஆட்சி தன்னில்!
துயர்ந்தது குறிஞ்சிநாடே.










( 5 )




( 10 )





( 15 )





( 20 )




( 25 )





( 30 )






( 35 )





( 40 )





( 45 )




( 50 )





( 55 )





( 60 )




( 65 )




( 70 )





( 75 )




( 80 )
பிரிவு -- 2

அயல்நாடு சென்ற திரைய மன்னனைத் துறைமுகத்தில்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

                      அகவல்

குறிஞ்சித் திட்டின் துறை முகத்தில்
குடிகளிற் பல்லோர் கூடி யிருந்தனர்.
அறிவழ கன்எனும் அமைச்சன் இருந்தான்
செழும்படைத் தலைவன் சேந்தன் இருந்தான்
அலுவ லகத்தினர் பலபேர் இருந்தனர்.

காலைக் கதிரவன் கடல்அ லைகளில்
மேலெல்லாம் ஏற்றும் மெருகின் அசைவையும்
அவர்கள் கண்கள் அடைய வில்லை.
நீர்ப்ப ரப்பின் ஆர்ப்பும் அவர்களின்
காது பருகக் கருத வில்லை.
அயல்நாடு சென்றதம் அரசர் திரையனார்
வருவதோர் கப்பல் வந்திடு கின்றதா?
என்று கடல்மேல் இறைந்தன கண்கள்!

ஏமாந்து போகவே எண்ணிலா முகங்கள்
இரங்கின; சேந்தன் இயம்பு கின்றான்:
'அரசர் அயல்நாடு சென்றார் நாட்கள்
ஐம்பதும் ஆயின அன்புறு குடிகள்,
நாடொறும் கடற்கரை நண்ணி அரசர்
வரவுபார்த் துப்பார்த்து இரவு திரும்புவர்.
தாயை இழந்த கன்றுகள் தம்மை
ஒத்தனர் அவர்கள்! உள்ளம் ஒடிந்தனர்.

இரண்டாண் டாக மழையே இல்லை.
விளைச்சல் குறைந்தது. விலை ஏறியது.
கட்டா தென்று கதறு கின்ற
தொழிலா ளர்க்கெலாம் வழிசெய வேண்டும்
நெய்யும் தொழிலும் நின்றது; நற்பயிர்
செய்யும் தொழிலும் சிதைந்தது பல்பொறி
படைக்கும் தொழிலும் பறந்தது; மலைக்கல்
உடைக்கும் தொழிலும் ஓய்ந்தது; மன்னர்
மறக்கத் தகாத இவற்றை மறந்தார்.

பிறநாட் டாரின் உறவையோ வரவையோ
நஞ்சென வெறுப்பவர் நம்நாட்டு மக்கள்
அயல்நா டுகளை அண்டி அவற்றை
நயந்து பிரிவினை நாடகம் நடத்தி
ஆளுவோர் காலடி நக்கி அதன்மேல்
தம்மொழி புகுத்திச் செம்மை ஒழித்து
விபூடணர் இருந்தால் வேண்டிக் கூட்டி

இரண்டுபடு நாட்டின் தலையில் ஏறிச்
சுரண்டும் தலைவர் தொல்லுல கிற்பல!
சுரண்டும் நாடுகள் தொல்லுல கிற்பலர்!
பிறரை ஆள்வதைப் பெரும்படை உள்ளதை
வல்லர சென்று வாழ்த்துவார் அவர்கள்
மூன்று சந்தையில் முடிச்சவிழ்த் தவனைத்
தக்கவன் என்று சாற்றுவார் போலும்.

எந்நாட் டுக்குநம் ஏந்தல் சென்றாரோ?
அந்நாட்டுத் தொடர்புநம் அரசனை அடைந்ததோ?
அதனால் அவர்கள் நம் அருமை நாட்டில்
காலடி வைத்துக் கலகம் விளைப்பரோ!

குமரிக் கடலில் இக்குறிஞ்சி நாட்டை
அயலார் அண்டா திருக்கும் வண்ணம்
கடற்சுழல் பலப்பல காத்து வருவதை
நாம்பெற்ற பேறென நவில வேண்டும்
நம்கடல் கடக்க நாமே அறிவோம்
பிறர்அறி யாரிது பெரும்பேறன்றோ?
மன்னர் அடிக்கடி மறுபுலம் செல்வதால்
செழித்த குறிஞ்சித் திட்டுக்கு வரும்வழி

அயலார் அறிந்து கொள்ளவுங் கூடுமே!
இன்றும் வராதநல் மன்னர் மற்றொரு
நாட்டிலோர் மூலையில் நல்லுரு மாற்றி
வருந்தத் தானே வேண்டும்? வாழ்வில்
துன்ப நிழலையும் சுவைத்தறி யாத
அரசர்க் கிந்த அல்லல்ஏன்? என்று
சேந்தன் உரைக்கையில் சேர்ந்த அக்குடிகளின்
கண்ணீர் மற்றொரு கடலைச் செய்தது.

அழுத படியே அமைச்சன் உரைப்பான்;
"மன்னன் திரையன் மக்கள் கருத்துக்கு
மாற்ற மாக மறுநாடு பல்முறை
சென்றுவந் துள்ளான்! மூன்னாண்ட மன்னர்
எவரும் பிறநாட்டுக் கேகிய தில்லை.
இவன்தந் தைக்கும் இவன்பாட்ட னுக்கும்
அமைச்சன் நான்! அவர்கள் நல்லவர்;
அவர்வழி வந்த அரசன் இப்படி!
மன்னனின் தவறுகள் என்னால் நேர்ந்தன
என்று நானிலம் இயம்புமே! இதனை
எண்ணுந் தோறும் என்னுளம் துடிக்கும்.

மன்னி மல்லிகை நாள்தொறும் கடற்கரை
வந்துவந்து பின்னர் வாரா மைக்கு
நொந்து நொந்து நோயுற் றதனால்
இன்று வரவும் இயலாமை உற்றார்."
என்று முதிய அமைச்சன் இயம்பவே.
உடல்கு லுங்க அழுதனர் உள்ளவர்!
கடலும் கதறி அழுதது! அப்போது
வண்ணம் பலப்பல ஆக வானில்
புறாக்கள் பறந்தன கண்டார் பல்லோர்
'புறாக்கள் புறாக்கள்' என்று
சிறாரொடு பிறரும் செப்பிஆர்த்தனரே.







( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )





( 140 )




( 145 )





( 150 )




( 155 )





( 160 )




( 165 )
பிரிவு -- 3

புறாக்களைச் சேந்தன் ஏன் என்று குரல் கொடுக்க, புறா
ஒன்றின் காலில் வரும் அஞ்சலால் கப்பல் வரும் செய்தி தெரிகிறது.

                     ( அறுசீர் விருத்தம் )


வானத்துக் கடலை நீந்தி
மணற்கரை அடைந்து தங்கள்
ஊனக்கண் ணால்கு றிஞ்சி
யூர்நோக்கி அறிவி னாலே
தீனிநா டோறும் போடும்
சேந்தனை நோக்கச், சேந்தன்.
ஏன் என்றான் புறாக்கள் எல்லாம்
இணைந்தன இணை அடிக்கீழ்!

'அன்பரீர் குறிஞ்சித் திட்டை
அடைந்ததென் கப்பல்' -- என்ற
பொன்னான அஞ்சல் தன்னைப்
புறாக்காலில் பெற்றான் சேந்தன்!
இன்பத்துக் களவும் உண்டோ
இவ்வுரை கேட்டார்க் கெல்லாம்!
'மன்னனைப் பெற்றோம் எல்லாம்
வரப்பெற்றோம்' என ஆர்த்தார்கள்.

( 170 )








( 175 )





( 180 )




( 185 )
பிரிவு -- 4

கப்பல் வந்தது. அக் கப்பலிலிருந்து அரசன் வந்திறங்கினான்.
அரசனோடு பலர் வந்திறங்கினார்கள்.

                      ( அறுசீர் விருத்தம் )


தோன்றிற்றுக் கப்பல்! உள்ள
தோணிகள் நிறையப் பல்லோர்
ஏன்றநல் லுடைக ளோடும்
இறங்கினர்; கரைக்கு வந்தார்!
கோன்வரக் கண்டார் மக்கள்
கொள்ளாத மகிழ்ச்சி கொண்டார்.
"ஏன் பிறர்? இவர்கள் யாவர்?"
என்றனர் பிறரைக் கண்டே.

முறுக்கேறும் மீசை யோடும்
முத்தேறும் தலைக்கட் டோடும்
நிறுக்காமல் தங்கம் கொண்டு
நிறுவிய படிவம் போன்ற
செறுக்கான ஓர்இளைஞன்
திரையனின் முதுகில் தன்னை
மறைத்தானாய் நடந்து வந்தான்
மற்றுமோர் இளைஞனோடே.

சிவாநந்தர் சிவசம் பந்தர்
சிவகிரிப் புகையி லைமேல்
அவாநந்தும் வாயராகி
அடைப்பைகொள் கையராகிப்
பவாநந்தர் கடையில் விற்கும்
பட்டணம் பொடிய ராகி
இவாநம்ப வாளா இல்லே
அவாளார்என் றங்கு வந்தார்.

நெற்றியில் மார்பில் தோளில்
நெடுங்கழுத் திற்சுண் ணாம்பு
பற்றிடப் பூசிச் செம்மண்
கோடுகள் பாய்ச்சி மூளை
அற்றான்போல் வான்ப ருந்தை
அரிகரீ என்றண் ணாந்து
மற்றுமோர் பேதை நானும்
மனிதன்தான் என்று வந்தான்.

பனம்பூவின் சுமைபோல் மேலே
பழுமயிர்க் கற்றை தூக்கி
இனம்சேரக் கொட்டை மாலை
எழிற்சாம்பல் மேல ணிந்து
முழந்தொங்குந் தாடி மீசை
முழக்காதில் வளையம் தோன்ற
மனிதன்நான் அல்லன் என்றோர்
மடத்தம்பிரானார் வந்தார்.








( 190 )




( 200 )





( 205 )




( 210 )





( 215 )





( 220 )




( 225 )





( 230 )

பிரிவு -- 5

(எதிர்கொண்டழைக்க வந்திருந்த அமைச்சன் முதலியவர்களை
நலம் கேட்க, அவரவர்கள் விடை கூறுகின்றார்கள்.)

                      அறுசீர் விருத்தம்

அமைச்சனை நோக்கி மன்னன்,
"அனைவரும் நலமா?" என்றான்.
அமைச்சன், "நம் தொழிலா ளர்கள்
அழுகின்றார என்று ரைத்தான்.
"இமைப்பினில் தீர்ப்பேன்; நாட்டில்
மழை உண்டா?" என்றான் வேந்தன்.
"அமிழ்தொரு துளியும் இல்லை"
என்றனன்; அறைவான் பின்னும்;

"அயல் நாடு சென்ற தொன்றே
அடுக்காத செயல்; அதன்மேல்
செயல்நாடி வாழ்கி லாத
திராவிட நாடு செல்ல
முயன்றனை! அந்த நாட்டின்
முற்றிய முடிச்சு மாறிப்
பயல்களை உடனழைத்து
வந்தது பழுதே" என்றான்.

அமைச்சனிவ் வாறு கூறக்
கெஞ்சின அரசன் கண்கள்!
"நமக்கெலாம் நலமே அந்த
நல்லவர் வருகையாலே!
தமிழுக்கும் திருத்தம் நேரும்
தமிழ்ச்சான்றோர் வருகை யாலே!
அமிழ்திணை நஞ்சென் னாதீர்
அமைச்சரே" என்றான் மன்னன்.

"அழுகையைச் சிரிப்பாக் கிற்று
நின்சொற்கள் அரசே, செத்த
கழுதைகள் நிலந்திருத்தா!
கள்ளிகள் ஊர்திருத்தா!
விழற்காடு நீர்திருந்தா
குழவியும் திருந்தி வாழும்
குறிஞ்சியைத் திருத்தல் உண்டா?

"தமைஎலாம் உணர்ந்தோர் என்று
சாற்றுமிக் குள்ளர் வந்து
நமைஎலாம் திருத்துதற்கு
நம்மிடம் என்ன உண்டு?
சமம்யாரும் என்கின்றோம்நாம்
நாமிதைத் திருத்தி விட்டால்
நமதடி நண்ணி னோர்க்கு
நாமடி யார்கள் அன்றோ?

"அன்பினால் தன்தோ ளின்கண்
ஆழ்வார்கள் வாழ்வா ரென்னும்
வன்பனுக் கடியார் வந்து
திருத்தஇங் கென்ன உண்டு?
இன்பொருள் ஒன்றே என்போம்
இதையவர் திருத்தி விட்டால்
அன்றொடு நாம்அன்னாரின்
அடியார்க்கும் அடியாரன்றோ?

"கெடானையும் கெடுப்பான் கையில்
கிட்டானைத் தொலைக்கச் செய்வான்;
அடாதன செயமுற் கூட்டி
அதிகாரி அடியில் வீழ்வான்;
கடாவெட்டி விழாத்தொ டங்கக்
கட்டளை இடுவான்; மக்கள்
இடருற வடமொ ழிக்கே
இடந்தந்து தமிழைக் கொல்வான்!

திருநெறி வகுக்க வேண்டிச்
சிவன்பணித் தானாம்! இந்த
ஒருநரி இங்கு வந்து
திருத்திட என்ன உண்டு?
இருள்நீங்கக் கல்வி வேண்டும்
எனும்கொள்கை இங்கே உண்டு.
திருத்திட்டால் மகவைக் கொன்றே
சிறுதொண்டர் ஆவோம் அன்றோ?"

எனச்சொல்லி முடித்தான்! - ஆங்கே
இதுகேட்ட திரைய மன்னன்,
"இனிஒன்றும் பேச வேண்டாம்;
என்தந்தை தந்தை தந்தை
இவாக்குநீர் அமைச்ச ராகி
இருந்தனிர் ஆத லாலே
சினமதை அடக்கிக் கொண்டேன்.
செல்லுக" என்று சொன்னான்;

"மாந்தர்கள் அமைதியாக
வாழுகின் றாரா?" என்று
சேந்தனை மன்னன் கேட்டான்.

"சிவக்கின்றார் நெஞ்ச மெல்லாம்!
ஆந்தைக்கண் அவர்க ளின்கண்!
வேந்தரே, அவர்கள் தொல்லை
விலக்குக!" என்றான் சேந்தன்.

"ஆகட்டும என்று சொல்லி,
வந்தவர் அனைவ ரோடும்
வாகிட்ட என்று கூறி,
"வந்திட்ட வண்டி ஏறிப்
போகட்டும் தரும் இல்லம
எனக்கூறிப் போனான் வேந்தன்
வாய்கட்டி மனத்துள் திட்டிச்
சென்றனர் மக்கள் யாரும்.

( 235 )







( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )





( 285 )





( 290 )





( 295 )





( 300 )




( 305 )





( 310 )






( 315 )




( 320 )