பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 21


மக்களின் எழுச்சியைக் கூறுவது.

தோழிதா மரை இவ்வாறு
சொன்னதைக் கேட்டி ருந்தோர்,
''வாநீ அம்மா! நாட்டின்
வடுப்போக்க வேண்டும், தாயே!
கோழியே குஞ்சு கட்குக்
கொடுமையும் விளைப்ப துண்டோ?
ஏழைமக்கட்கு மன்னன்
இன்னலைச் சூழ்ந்தா னம்மா?

''பன்னூறா யிரவர் மக்கட்
படையுண்டு, நீட்டும் கையில்
நன்னீரும் சோறும் நல்க
நான்குபேர் இராரோ? யாமும்
உன்னோடு தொண்டு செய்ய
வருகின்றோம் உயர்கு றிஞ்சி
நன்னாடு வாழ்தல் இங்கு
நாம்வாழ்தல் அன்றோ?'' என்றார்.

''எழுந்தது பெண்பட் டாளம்!
வாழிய குறிஞ்சி!'' என்றே
எழுந்தது சொல்மு ழக்கம்!
எழுந்தது மீட்சி ஆர்வம்! கொழுந்துவிட் டெறிந்தது அங்கே
கொடியவர் மீது சீற்றம்
வழிந்தது பொங்கி அன்பே
வண்டமிழ் வாழ்க என்றே!





( 5 )





( 10 )




( 15 )





( 20 )


பிரிவு -- 22

(தினைப்புனத்தைக் கோயிலாக மாற்றினார்கள்.)

(எண்சீர் விருத்தம்)

திைபை்புனத்தின் நிலைஒழித்து நான்குசுவர் எடுத்துத்
திகழுமதில் நாற்புறத்தும் பெருவாயில் தூக்கித்
தனித்தனியே கல்தச்சு மரத்தச்சோ வியங்கள்
தமிழ்ப்பாடல் ஆடல்எனும் சாகாத கலைகள்
எனைத்துண்டோ அனைத்தையுமே இணைத்தபெருங் கோயில்
எழிற்கொடிக்கை நீட்டித்தன் கலைத்தடங்கண் காட்டி,
இனித்தஇசை வாய்திறந்தே ''எல்லாரும் வாரீர்''
எனஅழைக்க, ஊர்மக்கள் எல்லோரும் சென்றார்.

( 25 )




( 30 )

பிரிவு -- 23

(கோயிலின் கலை நிகழ்ச்சிகளும், குழப்பங்களும்
ற்
ரும் நடைபெறுகின்றன.)

(எண்சீர் விருத்தம்)

மன்னவனும் தானிருந்தான், விநோதையவளோடு;
மங்கையவள் அம்புசமும் ஆடுகின்றாள் அங்கே!
பின்னிருந்து சம்பந்தன் பாடுகின்றான் பாட்டு;
பெரும்பாட்டுத் தமிழினிலே வடமொழியின் குளறல்;
அன்னதற்குப் பின்னிசையும் தாழ்ந்தவட பாங்கே!
அச்சஇடை நச்சுவிழி அங்குமிங்கும் ஓடப்
பின்னலொன்று பின்னசையக் காற்சிலம்பு கொஞ்சம்
பிழையின்றித் தமிழாடல் பெற்றனர் வந்தோரே!

தமிழாடல் நன்றென்று தாம்மகிழ்ந்தார் மக்கள்;
தவறான பிறவெல்லாம் சீஎன்றி கழ்ந்தார்!
'நமப்பார்வ தீபதையே!' என்றுசிவா நந்தர்!
நடுவினில்வந் துட்கார்ந்தார்; நகைத்தார்எல் லோரும்
சுமந்துவந்த சொற்பொழிவை இறக்கிவைப்பா ராகிச்
சொல்லலுற்றார். 'நமப்பார்வ தீபதையே' என்றே!
எமக்கேதும் புரியவில்லை என்றதொருகுரல்தான்;
'இதுதமிழே இதுதமிழே' என்றான்அன்னோனே!

'தமிழறியார் தமிழ்ச்செயலில் தலையிடுதல் சரியா?
தாம்திருந்தார் பிறர்திருந்தச் சாற்றவரல் தகுமா?
தமிழர்களின் நாகரிகம் தக்கதுவா? அன்றி
ஆரியரின் நாகரிகம் தக்கதுவா? என்றே
அமிழ்தத்தை மொழியாக்கி அம்மொழியில் எதிர்ப்பாம்
அணுகுண்டின் வலிசேர்த்தே தாமரையாள் கேட்டாள்
''தமிழ்தெரியும் எங்களுக்குத் தமிழர்களே நாங்கள்!
தமிழர்களின் நாகரிகம் மட்டம்'' என்றாள் விநோதை.

''ஒருத்தியை ஐவர்மணப்பது உங்கள்நாகரிகம்!
பிச்சைபுகல் உயர்வென்னல் உங்கள்நாகரிகம்!
வருபசிக்கு மானம்விடல் உங்கள்நாகரிகம்!
உயிர்கொன்று வேள்விசெயல் உங்கள்நாகரிகம்!
உருவணக்கம் செய்குவதும் உங்கள்நாகரிகம்!
மங்கயரை இழிவுசெயல் உங்கள்நா கரிகம்!
பெருமக்கள் ஒருதாயின் மக்களெனச் சொன்னால்,
பெருந்தொகைவேற் றுமைநாட்டல் உங்கள்நாகரிகம்!

"பழியாயி ரம்செய்தும் கழுவாய்தேடிடவே
பார்ப்பானை ஒப்புவதும் உங்கள்நாகரிகம்!
எழுத்தினிலே தலையெழுத்தொன் றுள்ளதாம் என்றே
ஏய்ப்பானை ஏற்பதுவும் உங்கள்நாகரிகம்!
பிழிந்தெடுத்த பொய்நூல்கள் மெய்நூல்கள் என்று
பிறநாட்டார் நம்பவைத்தல் உங்கள்நாகரிகம்!
அழியாத தமிழ்நாட்டில் தமிழாலே வாழ்ந்தும்
அழியட்டும், 'தமிழ்' என்ப துங்கள்நாகரிகம்!

"காதல்மனம் தீதென்ப துங்கள்நாகரிகம்!
காட்டுவிலங் கைப்புணர்தல் உங்கள்நாகரிகம்!
மோதிடவே இப்பிறப்பில் முற்பிறப்பு மற்றும்
மறுபிறப்புக் கரடிவிடல் உங்கள்நாகரிகம்
ஓதவரும் நீதியெலாம் பொதுவென்ப தன்றி
ஒருகுலத்துக் கொருநீதி உங்கள்நா கரிகம்!
மாதருக்குக் கற்பின்மை உம்நாகரிகமே!
வாய்த்தமிழ் நாகரிகம் மட்டமல்ல!'' என்றாள்,

என்றுரைத்த அந்தநல்ல தாமரையாள் தன்னை
''எது உங்கள் நாகரிகம்?'' என்றாள்விநோதை.
''என்னவறு மைவரினும் இன்னல்பல வரினும்.
ஏற்றல்இழி வென்பதுவே எங்கள்நாகரிகம்!
இன்னாத செய்துபசித் தீயடக்கல் தனினும்
இறத்தல்புகழ் என்பதுவே எங்கள்நாகரிகம்!
கன்னியர்தம் உயிரினிலும் கற்புயர்ந்த தென்று
கருதியே வாழ்வதுதான் எங்கள்நாகரிகம்!

''ஒருத்திஒருத் தனைமணத்தல் எங்கள்நாகரிகம்!
ஒருத்தன்ஒருத் தியைமணத்தல் எங்கள்நாகரிகம்!
ஒருத்தன்ஒருத் திக்குநிகர் எங்கள்நாகரிகம்!
உலகமக்கள் நிகர்என்ப தெங்கள்நாகரிகம்!
கருதிச்செய் தீமைக்குக் கழுவாய்ஒன் றில்லை;
காவலனின் பொறுப்பதெனல் எங்கள்நாகரிகம்
பெருத்தஉடல் வீழ்ந்தபின் பெரியநிலை தேடல்
பெருந்தவறே என்பதுதான் எம்நாகரிகமே!

''ஆதியினின் றுலகம்உயிர் அத்தனையும் தோன்ற
அடைவதறி வேஎன்ப தெங்கள்நாகரிகம்!
சாதிஇல்லை என்பதுதான் எங்கள்நாகரிகம்!
சமயமில்லை என்பதுதான் எங்கள்நாகரிகம்!
நீதியும் ஒழுக்கமுமே யார்க்கும் நிகர் என்போம்!
நிறைகல்வி நிறைசெல்வம் யார்க்கும்நிகர் என்போம்.
சாதிக்கொன் றுரையாமை எங்கள்நாகரிகம்!
தனிப்புகழே நிலைஎன்ப தெங்கள்நாகரிகம்!

''தமிழரது நாகரிகம் மட்டமென்று சொன்னாய்,
தார்வேந்தர் ஆதரவு பெற்றிருப்ப தாலே!
கமழ்தென்றல் தீதென்றாய்! கடல்சிறிய தென்றாய்.
காவின்மலர்த் தேன்கசக்கும் கரும்பெட்டி என்றாய்!
தமிழரது நாட்டினிலே தமிழ்க்கள் நடுவில்
தமிழ்நாக ரிகம்மட்டம் என்றுரைத்தாய் என்றால்,
தமிழர்களின் நிலைமைதனை நன்கறிந்தா யில்லை;
தப்புக்கணக் கிட்டாய் விரைவில்அறிந்திடுவாய்!

''உன்துடுக்கும் உன்துடுக்கின் உள்வலியும் காண்பார்;
உயிர்அற்றுப் போகவில்லை இங்குள்ள தமிழர்!
மின்துடிப்ப தைப்போல மனம்துடிக்கின் றார்கள்.
வீணாகிப் போகாது தமிழர்களின் சீற்றம்!
பின்துடிப்பாய் இந்நாட்டுப்பெருமக்கள் அடக்கம்
வரும்போரின் தொடக்கமே. இதைமறந்தாய் பேதாய்!
என்துடிப்பு மட்டுமே இதைக்கூறவில்லை.
இனத்தாரின் துடிப்பும் என்பேச்சும் ஒன்றே!'

தாமரைஇவ் வாறுரைக்கத் தார்வேந்தன் சொல்வான்
''தாமரையும் விநோதையும் தணிந்திடுக மாற்றம்.
நாமிங்கு வந்தோம்! விழாப்பார்க்க அன்றோ?
நடத்திடுவீர் சொற்பொழிவை நல்லதமிழாலே.
தீமைசெய வேண்டாமே சிவானந்தரேநீர்
செந்தமிழில் பேசிட்டால் இன்னதென்று தெரியும்.
ஆமாங்கா ணும்துவக்கும என்றரசன் கூற,
ஆஆஎன் றாநந்தர் அழத்தொடங்கினாரே.

"நமப்பார்வ தீபதையே" எனப்பின்னும் நவின்றார்.
நகைத்தார்கள் எல்லோரும் நிறுத்தென்றான் மன்னன்.
"தமிழ்வருமோ" திருமாலுக் கடியாரே' நீவிர்
சாற்றிடுக நல்லுரைகள்!" என்றுரைக்கக் கேட்டு
"நமக்குவரும் கோவிந்த நாமசங்கீர்த் தனமே!"
இவ்வாறு நாய்குலைக்க; நிறுத்தென்றான் மன்னன்;
"தமிழ்வருமே நமக கென்றான் தம்பிரான்! மன்னன்
"சரிபேசும என்றுரைக்கத் தம்பிரான் சொல்வான்.

"எங்கும்நிறைந் திருக்கின்ற ஒரு பொருள்தான் இங்கே
எழுந்தருளி இருந்ததுவாம் சிவமெனும்பேர் தாங்கி'
தங்கியஇக் கோயிலுக்கு நாடோறும் வந்து,
சிவனாரின் தாள்தொழுதால் வேண்டுவது தருவார்.
உங்களுக்கெ லாம்அவரே உடையவராம்; நீங்கள்
உயிர்வாழ்வ தவ்வடியார்க் குதவிசெயும் பொருட்டே.
எங்கேனும் என்போன்ற அடியாரைக் கண்டால்,
இட்டுவந்து கும்பிட்டுச் சோறிடுதல் வேண்டும்.

"நாடோறும் சிவபெருமான் கோயிலுக்கு வருக!
நாடோறும் சிவனார்க்குப் பூசைகள் நடக்கும்.
நாடோறும் பூசையின் நடைமுறையின் செலவை
நாடோறும் அவரவர்கள் கொண்டுவரும் காசால்
நாடோறும் நிறைவேற்றி நன்மைபெற வேண்டும்.
நாடோறும் உழைத்திடுக! நல்லபணம் பெறுவீர்.
நாடோறும் இரண்டுபணம் நம்பெருமானுக்கே
நல்குவதால் நானூறு பணம்தருவார் உமக்கே."

தானிவ்வா றுரைத்திட்டான் தம்பிரான் ஆங்கே;
தாமரையாள் உடனிருந்த தலைக்கொழுத்தான் ஒருவன்.
"ஏனையா நானூறு பணத்தைமுன் தந்தால்,
எடுத்தெடுத்து நான்குபணம் தந்திடுவோம் நாளும்
ஆனதினால் இப்போதே அருளச்சொல் லுங்கள்.
அதிலுமக்கும் தரகுதர அட்டியில்லை" என்றான்.
கோனான திரையனுக்குத் தோன்றவில்லை எதுவும்;
"கொடுப்பாரோ சிவபெருமான்?" என்று கேட்டானே;

"நாலுபணம் நாம்கொடுத்தால் கண்ணுக்குத் தெரியும்
நானூறு சிவனருளால் நாள்செல்லத் தெரியும்,
நாலுபணம் பணவுருவில் நாம்கொடுத்தால், அவரோ
நானூற்றை வேற்றுருவில் நமக்கருள்வார என்றான்.
"நாலுபணத் தைச்சிவனார் என்னசெய்வார்?" என்று
நவின்றதொரு குரலங்கே. "நமச்சிவனார் தொண்டர்
பாலுக்கோ பழத்திற்கோ பசுநெய்க்கோ மற்றும்
பருப்புக்கோ செருப்புக்கோ செலவாகும்'' என்றான்.

''மற்றவைகள் நடக்கட்டும்; இனியாரும் இங்கே
வாய்திறந்தால் படைத்தலைவன் சிறைபடுத்த'' என்று
கொற்றவனும் சொல்லிவிட்டான், விநோதை சொற்படியே,
கோயிலிலே சிவபூசை தம்பிரான் தொடங்க,
உற்றநாய்ச் சோற்றுக்கோர் ஊர்நாய்வந்ததுபோல்
''ஓய்உள்ளே போகாதீர் பிராம்மணன்நான்'' என்றே
முற்சென்றான் கோயிலுக்குள் சிவாநந்தன் என்பார்
முடுகினார் சிவனார்மேல் முட்டிவிழுந்தாரே.

சிவபெருமான் எனுமந்தச் சிறுகல்லும் பெயர்ந்து
திடீரென்று விழுந்ததனால் இடிவிழுந்ததைப்போல்
கவலையுற்றாள் விநோதையவள் கவிழ்ந்தடித்து வீழ்ந்து
கடகடெனப் புரண்டபடி சிரித்தானங் கொருவன்.
அவன்சொன்னான் சிவனென்ற குழவிக்கல் காணீர்;
அடிபுதையாக் காரணத்தால் முடிசாய்ந்து போனார்!
அவரடியை அடைந்தார்க்கே ஆவதென்ன? இங்கே
அவரடியார் அடிதாழ்ந்தால் ஆவதென்'' னென்றானே:

''இடையிற்பே சிடுவோரைச் சிறையிலிட வேண்டும்
என்றேனே சேந்தனே ஏன்விட்டாய்?'' என்றே,
மிடலுடைய வேந்தனும் கூறியது கேட்ட,
மேன்மையுறு சேந்தனவன் விரைவினிலே அங்குச்
சிடுசிடுத்துக் குறிக்கிட்ட சிவாநந்தர் தனையும்
திறப்பேச்சும் பேசியஓர் தீயனையும் கட்டி
நடத்தினான் சிறைநோக்கி விநோதை இதைக் கண்டு.
''நம்நண்பர் சிவாநந்தர் விடுக'' என்றாளே!

ஒருவனல்ல இருவரையும் விடுவித்தான் மன்னன்.
"ஒருவருமே இனிக்குறுக்கே பேசற்க'' என்றான்.
தரைவீழ்ந்த சிவபெருமான் தம்மிடமும் பெற்றார்.
தம்பிரான் பூசைசெய ஒப்புதலும் பெற்றான்.
திருஅகவல் தம்பிரான் செப்பிநலம் பெற்றான்.
''செத்தானாம் அங்கொருவன பாம்புகடித்ததனால்;
அருளாயோ சிவனேஎன் அப்பா!'' என்றொருவன்
அவனைஎழுப்பித்தரவே அழுதுதுடித்தானே!

தப்பிரான் அவ்வுடம்பைத் தனிஒருபால் வைத்தே
சாக்காட்டை நீக்கிஉயிர் தரவேண்டி நின்றான்.
தெம்பின்றி ஒருவனங்கே தேம்பிஅழ லானான்
''சிவனேஎன் வயிற்றுவலி தீர்!'' எனவேண் டிடுவான்.
தம்பிரான் அவனுக்கும் சாம்பர்அணி வித்தான்
சரியாயிற் றென்றவனும் மகிழ்வோடே சென்றான்.
நம்பினார் பற்பலரும் செத்தவன் எழுந்தான்
'நட' என்றான் தம்பிரான் நடந்தான்செத்தவனே!

''கண்தெரிய வில்லை'' என்று கண்ணப்பன் வந்தான்?
கையாலே தம்பிரான் திருநீறு தந்தான்.
''கண்தெரிந்து போனதெ''ன்று கண்ணப்பன் போனான்
''காதுசெவிடானதெ''ன்று கன்னியப்பன் வந்தான்.
வெண்ணீ் றுதந்தவுடன் தீர்ந்ததென்று போனான்;
விலாஎலும்பு மறைந்ததுபின் மீண்டதொருத் திக்கே!



( 35 )




( 40 )






( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )






( 125 )





( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )






( 180 )





( 185 )




( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )

பிரிவு -- 24

(தெய்வ நம்பிக்கை யூட்டுதல்)

(எண்சீர் விருத்தம்)

அங்கிருந்த அம்புசத்தின் முடியின் மீதில்
அடிவைத்தான் சிவபெருமான் ஆத லாலே!
தங்காமல் ஒருபக்கம் அங்கு மிங்கும்
தடதடென ஓடுகின்றாள் ஒருபால் நின்றே
''எங்கேடா முத்தலைக்கோல்'' என்றே ஆடி.
முன்னோடி அன்னதனை எடுத்துக் கண்ணை
எங்குமுள மக்கள்மேல் உருட்டி. ''என்னை
என்னடா கேட்கின்றாய்?'' என்று கேட்டாள்.

"இதுஎன்ன?" எனக்கேட்டான் குறிஞ்சி மன்னன்.
"இவரன்றோ சிவபெருமான்?" என்றாள் மங்கை.
"மதிமுகத்தாள் அம்புசமன்றோஇந்தப்பெண்?
மற்றிவளைச் சிவனென்ப தென்ன:" என்றான்.
"பொதுச்சிவனும் அம்புசத்தின் உடலுயிர்க்குள்
புகுந்ததானால் அம்புசமே திப்போ" தென்றாள்.
"குதித்தாளே! அது என்ன?" என்றான் மன்னன்?
"கூத்தாடல் சிவபெருமான் வழக்கம என்றாள்.

வேந்தனும்வி நோதையுமே பேசு மட்டும்
வேலையற்று நின்றிருந்த சிவனார், பின்னர்:
,'சார்ந்ததுண்டோ உன்றனுக்குக் கவலை?" என்றார்.
"தார்வேந்தன் நிலையுரைப்பீர்'? என்றாள் மங்கை.
"ஏந்தலுக்கே எக்குறையும் இருக்கா" தென்றார்.
"என்சாவி காணவில்லை எங்கே?" என்வாள்.
"ஆய்ந்துபார் கைப்பேழை தன்னில என்றார்.
அதில்கண்டாள் சாவிதனை அவ்விநோதை!

"என்அன்பர் இழந்தபொருள் என்ன?" என்றாள்.
"எழிலான மல்லிகைதான்! வாள்தான்!" என்றார்.
மன்னவனும் "வாளெங்கே?" என்று கேட்டான்.
"மலர்வனத்துக் கிணற்றினிலே ஒருவன் போட்டுப்
பின்னதனை அவனுடைய எண்ணங் கொண்டான்;
பெருங்கிணற்றில் இப்போதே பெறுவீர என்றார்.
அன்னதனை இப்போதே ஆட்கள் தேடி
அரசனிடம் கொடுத்தார்கள் மகிழுமாறே.

"என்பிள்ளை காணவில்லை" என்றான் ஓர்ஆள்;
"இப்போதே வரும என்ன. அவனும் வந்தான்;
"பொன்னாக வேண்டுமிந்த மண்ணாங் கட்டி
புரிந்திடுக அரு"ளென்றான் ஓர்ஆள் தந்தே!
தன்மார்பில் அதைவைத்துச் சிவனார்; "இந்தா
தங்கத்தின் கட்டி" எனறார்! எவரும் கண்டார்.
"இன்னுமிந்த முடியினிலே இருக்க மாட்டேன்.
இறுதியாய் நானுரைத்தல் கேட்பீர என்றார்;

சிவபெருமான் சொல்லுகின்றார், "குறிஞ்சி நாட்டைச்
சேர்ந்தவரே! என்மக்காள்! சிவனார் நாமே,
சிவனாரைத் தொழுபவர்கள் சைவர் ஆவார்.
நீங்களெலாம் சைவர்களாய்த் திகழ வேண்டும்
சிவமதமே எம்மதங்க ளுக்கும் மேலாம்.
சிவமதமொன் றேஇருக்க வேண்டுமிங்கே.
அவன்சொன்னான் இவன்சொன்னான் என்று வேறே
எம்மதமும் சேர்க்காதீர் அதுவு மின்றி

"நாடோறும் கோயிலுக்கு வருதல் வேண்டும்;
நல்லநல்ல காணிக்கை கொணர்தல் வேண்டும்;
தேடியஉம் சொத்தெல்லாம் நம்சொத்தேயாம்.
தேர்என்றும் திருவிழா என்றும் நீங்கள்
வாடாத மனத்தோடு நடத்த வேண்டும்
கோயிலினால் வாழ்வோர்கள் இருக்கின்றார்கள்.
ஈடேற வேண்டுமென்றன் அடியாரெல்லாம்
இகழாதீர் எரிச்சல்வரும் நமக்கே இன்னும்.

"தெருவெல்லாம் சிவன்கோயில் கட்ட வேண்டும்!
"தெருவெல்லாம் சிவனடியார் பெருக வேண்டும்
உருவெல்லாம் சிவனாரை நிறுவ வேண்டும்.
ஊரெல்லாம் நம்முருவே நிறைந்த பின்னர்,
இருபிள்ளை எமக்குண்டு வைத்துக் கொள்க,
எழில்மனைவி இருக்கின்றாள் வைத்துக் கொள்க.
உருவெல்லாம் கல்லுருவே என்பதில்லை.
ஓவியமும் எழுதலாம் நம்மைப் போல!

நாளெல்லாம் நம்பெயரை நவில வேண்டும்;
நவிலுகநம் திருவிளையாடல்கள் வேறே.
கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோ னாட்சி
குண்டாட்சி, புகையாட்சி, குறுக்கிலேபூ
ணூலாட்சி, என்றபல ஆட்சி பற்றி
நுவலுநூல் வெளிவருதல் கூடா திங்கே
வாலாட்டும் பகுத்தறிவை வளர்க்குமந்த
வதைப்பேச்சும் வெளிவருதல் வேண்டாம், வேண்டாம்.

"எங்கணுமே நமதுகுறி இலக வேண்டும்.
எழிலான பசுமாட்டின் கழிவை ஏந்தித்
திங்களைப்போல் வெண்மையதாய்ச் சுட்டெடுத்துத்
திருநீறென் றதற்குமொரு பேரு மிட்டே
அங்கையிலே நீரிட்டுக் குழைத்துக் கொண்டே,
முறத்திற்குக் கட்டிட்ட வண்ணம் ஆக,
செங்கைவிரல் மூன்றாலே நெற்றி தன்னில்
'சிவசிவ' என் றமைத்தல்குறி ஆகும் காணீர்.

'அச்சாம்பல் அள்ளியே உடம்பு நெற்றி
அழகுபெறப் பூசுவதும் நமக்கு வப்பே!
மெய்ச்சாம்பல் குழைத்திட்டுப் பட்டை தன்னை
மேல்முகட்டில் கீழ்த்தரையில் சுவரில் எல்லாம்
பொய்ச்சலின்றி அடிக்கொன்றாய நிறையப் போட்டால்
போதும்இனிக் கதவுநிலை தட்டு முட்டுக்
கைச்சாத்துக் கணக்கேட்டுச் சுவடி பெட்டி
காடிஉப்புச் சட்டிகூழ்ப் பானை சீப்பே,

"கண்ணாடி குமிழ்ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின்விசிறி மின்வி ளக்கு
நண்ணுமதின் மேற்கவிப்புத் துடைப்பக் கட்டை
நடையன்கள் மாடாடு தொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற்போர் பந்தல் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறுசாக் கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்.

"கற்றவர்கள் தொழுசாம்பல் பொடியை வாங்கிக்
கக்கூசில் போடுவோன் கழுதை யாவான்
நெற்றியிலே இடும்சாம்பற் பொடியை நன்செய்
நிலத்தினிலே எருவிடுவோன் நரியே ஆவான்.
நற்பாலும் நறுங்கனியும் நலமோ செய்யும்?
நாலுபடிச் சாம்பலுண்டார் நம்தாள் சேர்ந்தார்."
மற்றிவ்வாறுரைத்துப்பின் சிவபிரானார்
மலையேறினார். பிறகோர் கூச்சல் அங்கே:-

திருமாலுக் கடியாரின் முடிமேல் ஏறித்
திருமாலும் கூச்சலிட்டார். "யார் யார்?" என்று
தெரிவை அவள் விநோதைதான் கேட்கலானாள் :
"திருமால்நான என்றுதிருமாலும் சொன்னார்.
"திருமாலே பிறகொரு நாள்வரலாம்; இன்று
திரும்பிப்போய் விடவேண்டும என்றாள் மங்கை.
"ஒருபோதும் போகேன்நான் சிவனை மட்டும்
ஒருமணிநேரம்வரைக்கும் பேச விட்டீர்.

"நான்மட்டும் தாழ்ந்தவனா? திருமால் என்றால்
நான்முகனைப் பெற்றவனாம்! நான்முகன்தான்
வான்செய்தான்; மண்செய்தான்; நிலவைச் செய்தான்;
வான்பரி தியைச் செய்தான்; கடலைச் செய்தான்;
ஊன்செய்தான்; உயிர்செய்தான்; மக்கள் என்றே
உருச்செய்தான்; செல்வமெல்லாம் செய்தான்; விண்மேல்
மின்செய்தான்; தேன்செய்தான்; எல்லாம் செய்தான்.
மேலோனைக் கைவிடுதல் நன்றோ? நன்றோ?

"எவ்வுயிரும் காப்போன்நான்; ஆக்குவேன்நான்;
அழிப்பவனும் இத்திருமால் ஒருவன் தானே!
அவ்வெறியன் சிவபெருமான் பெருமானல்லன்;
அவன்ஒருநாள் வெறிபிடித்துத் திரிந்தபோது,
செவ்வையுறச் செய்தவனும் நான்தான் என்றால்,
இல்லைஎன்று செப்புவோன் எதிர்வரட்டும்!
எவ்வகையிற் பார்த்தாலும் கடவுள் நானே!
என்னோடு போட்டியிட எவனாலாகும்!

"திருமாலை விட்டுணுஎன் றுரைப்ப துண்டு,
செப்புமந்த விட்டுணுவைத் தொழுவோர் தம்மை
உரைப்பதுண்டு வைட்டினவர் என்று நாட்டில்
உள்ளவர்கள் வைட்டினவர் ஆக வேண்டும்.
பெருநாட்டில் வைட்டினவ மதமே யல்லால்,
பிறமதங்கள் எவற்றையுமே ஒப்ப வேண்டாம்.
..............................................................................................................
..............................................................................................................
திருநாமம் எனக்குள்ள குறியே யாகும்.
திருநாமம் திருமண்ணே இரண்டு கோடு
திருச்சுண்ணாம் பாலாகும்; நடுவில் ஒன்று
செந்தூரத் தாலாகும்; குறுக்கில் அல்ல.
திருநெடுக்கில் நின்றதிருக் கோலமாகத்
திகழவே நெற்றிதலை கழுத்துத் தோள்கள்,

முதுகுவயி றெவ்வுறுப்பும் சாத்தவேண்டும்.
முன்இங்கே சிவன் சொன்ன தைப்போல் வீடு
மதில்தோட்டம் பல்பொருள்கள் எவற்றின் மேலும்
பளபளென நாமத்தைச் சாத்த வேண்டும்.
எதிரிலொரு நாமமில்லான் செல்லக் கண்டால்
இழுத்துவந்தே நாமத்தைப் போட வேண்டும்
பொதுச்சொத்தாம் மலைஒன்றில் நாமம் போட்டுப்
போனபல நூற்றாண்டாய் வைட்டினர்க்கே,

"மலைஉரிய தென்றுரைக்க வேண்டும். என்றன்
மனங்களிக்கத் தெருவெல்லாம் கோயில் வேண்டும்.
இலைஎன்றால் இந்நாடு நலமுறாதே!"
என்றவுடன் விநோதைதான். "ஐயா போதும்

மலைஏற வேண்டு" மென்று சொல்ல, ஏழு
மலையானும் மலையேறித் தொலைந்தான்; அங்கே!
தலைகுனிந்து கொண்டிருந்தான் மன்னன்;மக்கள்
சதைகிழியச் சிரிப்பை உள்ளே அடக்கினார்கள்.

"வையகத்தில் நல்வாழ்வு வாழ்வதற்கு
மதம்வேண்டும். மதமில்லை யாயின் மக்கள்
உய்யத்தான் முடியுமா? இருமதங்கள்
உரைத்தார்கள் விட்டுணுவும் சிவனு மிங்கே!
மெய்யான மதங்களே இரண்டு்ம்! மக்கள்
மேற்கொள்ள வேண்டுமென விளம்பு கின்றேன்.
'தெய்வமிக ழேல்' என்றார் ஒளவை யாரும்.
சிறிதுமிங்கே நடந்தவற்றை இகழவேண்டா!"

என்றுரைத்த, விநோதைதான், எனக்குப் பின்னால்
இவைபற்றி மன்னரும்தங் கருத்தைச் சொல்வார
என்றுரைக்க, மன்னவனும் இயம்பு கின்றான்;
"எல்லார்க்கும் மதவாழ்வு வேண்டும். ஆனால்,
ஒன்றிருக்க மற்றொன்று ஏன்?" என்றானவ்
வொண்டொடியாள் மன்னவனின் இடையிற் கிள்ள,
,'நன்றுதீ தறிவதற்கே இரண்டும் வேண்டும்;
நடத்துவோம் இரண்டையுமே" எனமுடித்தான்.

மீண்டுமந்த விநோதைதான் எழுந்திருந்து,
"வேந்தர்மேல் அன்புடைய அமைச்சர் தாமும்
ஈண்டுத்தம் கருத்துரைப்பார என்று கூற,
அறிவழகன் எனுமமைச்சன் எழுந்து சொல்வான் :
"வேண்டுவது கல்விஒன்றே! நம்மேல் வந்து
விழாதிருக்க வேண்டுவது மதமே ஆகும்!
மாண்புடைய கல்வியினால் அறிவும் அன்பும்
மனநலங்கள் உண்டாகும். வாழ்க்கை நன்றாம்!

மதமான பேய்பிடியா திருக்கவேண்டும்.
மதம்பார்ப்பான் கல்வியினை மாய்க்கப் பார்ப்பான்.
இதோ அந்தச் சென்னையிலே நடப்ப தென்ன?
இருந்தமத நம்பிக்கை குறைந்த தாலே
மதத்தால்வாழ் வார்தலைவன் அமைச்ச னாகி,
வளர்ந்துவரும் கல்விதனைப் பாதி ஆக்கிக்
கொதித்தெழுந்த தமிழர்களைச் சுட்டுத் தள்ளிக்
குதிக்கின்றான் தோற்பாவை குதித்தல் போலே!

"அதிகாரக் கயிறறுந்து போவதற்குள்
அகத்துறையின் அதிகாரர் அனைவருந்தம்
மதிக்கிசைந்து வருபவராய் இனஞ்சார்ந்தாராய்
வாருங்கள் வாருங்கள் என்று கூவிப்
பதைப்போடும் அழைக்கின்றான். மதம் வளர்ந்தால்
படுபாழாம் பகுத்தறிவு! வாழ்வார் பார்ப்பார்!

எதற்கிந்த மதம்கோயில் இழவு வேண்டாம
என்றுரைத்தான் அறிவழகன்! விநோதை சொல்வாள்.

"அவனருளால் அருஞ்செயல்கள் நடக்கக் கண்டோம்.
அவன்வாழ்வே நம்வாழ்வென்றறிந்து கொண்டோம்.
'அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை;
என்றுரைப்பார் அறிஞரெலாம் அறிவோம் நாமும்.
சிவன்இங்கே எழுந்தருளத் தவந்தான் என்ன
செய்தோமோ? அமைச்சரிதை மறுக்கலாமோ?
அவர்கருத்தை நாமறிந்தோம். சேந்தனாரின்
அறிவிப்பை நாமறிய வேண்டும என்றாள்!

"என்னருமைத் தோழியரே, தோழன் மாரே
என்கருத்தை யானுரைக்க வேண்டு" மென்றார்.
"சென்னையிலே மதமென்றும் கோயி லென்றும்
சிவனென்றும் மாலென்றும் மலரோன் என்றும்
அன்னவரின் மக்கள் என்றும் மனைவி என்றும்
இன்னுமிவர் போல்இரிசன் மாடன் காடன்
சின்னாண்டான் பெரியாண்டான் பிச்சை யாண்டான்
சிவப்பாண்டான் கறுப்பாண்டான் வெள்ளை யாண்டான்;

"கருப்பாயி காட்டேரி காளி கூளி
கருமுத்து மாரிஇரங் காளி காய்ச்சல்
பொறுப்பாளி பீனிசத்தாள் கண்நோய் அம்மன்
புரையாளி பிளவையம்மன் தொண்டைப் புற்றாள்
குறிசொல்லி மலைக்கன்னி கொல்லி என்றும்
கூறுமிவர் ஊர்திகளாம் ஆடு மாடு
சிறுத்தைஅரி மாகுரங்கு கோழி காக்கை
சிறுகழுதை பெருச்சாளி கழுகு நாய்பேய்;

"என்றுமவர் அடியார்கள் அடியார்க்காக
இளமனைவி தனையளித்தான். கல்லில் மோதித்
தன்குழந்தை தலையறுத்தான். கல்லில் மோதித்
தலையுடைத்தான். மூக்கறுத்தான் கண் அகழ்ந்தான்
மன்னவன்போல் பொதுப்பணத்தை வஞ்சம் செய்து
மாக்கோயில் கட்டினான் என்று கூறி
மன்னுபகுத் தறிவழித்து மானம் போக்கி,
மறைக் காட்டித் தமிழ்நூற்கள் கருத்தை மாற்றி;

தீமைஎலாம் தமிழருக்கே, நன்மை எல்லாம்
தங்களுக்கே! வறுமைஎலாம் தமிழ ருக்கே
ஆமந்தச் செல்வமெல்லாம் தங்க ளுக்கே!
அடிமைநிலை தமிழருக்கே; ஆட்சி எல்லாம்
வாய்மிகுந்த தங்களுக்கே! சிறுமை எல்லாம்
வாயற்ற தமிழருக்கே; பெருமை எல்லாம்
வாய்மை அற்ற தங்களுக்கே! எனும்நி லைமை
குறிஞ்சியிலும் குடிபுகுந்து விடக்கூடாதே!

"என நினைத்து விநோதைஅம்மா சென்னை தன்னில்
இழிவுநடை படைஎடுக்கும்வ ரலா றெல்லாம்
மனதினிலே நமக்கெல்லாம் படும்படிக்கு
மாத்தமிழில் நாடங்கள் நடத்தினார்கள்.
இனத்தாரே பார்த்தீரா, உருவம், கோயில்
எம்பெருமான் முடிமீதில் ஆடுங் கீழ்மை
நினைத்தாலும் அருவருப்பே அன்றோ? துன்ப
நிகழ்ச்சிகளைக் கான்றுமிழ்வோம்!" என்று சொன்னான்.

"மிகநல்ல நாடிந்தக் குறிஞ்சி நாடு.
விளைநிலங்கள் மிகவுண்டு; வயல்கள் உண்டு;
தகுமாறு நாற்புறமும் கடல்கள் உண்டு;
தங்கவயல் உண்டு; பழத்தோட்ட முண்டு;
பகையஞ்சும் இயற்கையரண் உண்டு வண்டு
பாடுகின்ற பூங்காவனங்கள் உண்டு;
அயலிடங்கள் உண்டு. மக்களிடத்தில் மட்டும்
அறிவுதா னிலை!" என்று விநோதை சொன்னாள்

கண்ணெலாம் தீப்பிறந்த தங்குள் ளார்க்கே
கைகள்உடை வாள்தடவும்! விலகும்! அந்த
மண்ணாண்டா னிடம்வணக்கம் காட்டி வந்த
வழக்கமெனும் ஒழுக்கத்தை மறித்த தேனும்;
அண்டையிலே இருந்திட்ட செழியன், "பெண்ணின்
அழகுக்கோர் தனியாற்றல் கண்டேன்!" என்று
புண்பட்ட நெஞ்சத்தாற் சிரித்துச் சொன்னான்.
"பொறுப்பாய என்றான்சேந்தன். செழியன் மேலும்

"குழிநெருப்பின் நடுவினிலோர் விளாம்பழத்தில்
குதித்திட்ட குரங்கேபோல் மன்னர் இப்பெண்
இழிநடத்தை நடுவினிலோர் அழகில் வீழ்ந்தார்!
இனத்தாரின் தமிழரசர் இறந்தார்! நாட்டின்
அழிவுக்கு வலைவீசும் ஒருத்தியைப்போய்
ஆதரிக்கும் அரசர்உள்ளார் என்றால். நாம்நம்
விழிமூடி இருக்கும்நாள் அவள்விழாநாள்!
விழாமங்கை விழும்நாள்நம் விடுதலைநாள்!

"கொடியவளை ஆதரிக்கும் கொடியோய்!" என்று
கொலைவாளைத் தான்எடுத்தான் செழியன் ஓடி
"விடுவாளை" எனமறித்து வீழ்ந்தான் மண்ணில்;
"வேண்டாம் என் றிடைமறிந்தான் அமைச்சன்;
                          வீழ்ந்தான்
அடிநால்வர், இடைபதின்பர், தோளைப் பல்லோர்
அழுந்தும்வகை யேபற்றி, "ஐயா! மன்னர்
முடிவுநாள் இதுவல்ல; உணர்வில் மக்கள்
முழுத்திருநாள் அண்மையிலே!" எனத்தடுத்தார்.

"வாட்படைக்கு நம்மாணை! செழியன் வீழ்க!"
என்றுசொல்லி விநோதையுடன் மன்னன் சென்றான்.

"ஆட்படையும் அழிக்கட்டும எனவி நோதை
அகலுகையில் நடுக்கமுடன் கூவிச் சொன்னாள்!
காட்டுழுவை அசைவினிலே முயற்கூட்டம்போல்
கைப்பற்றி னோர்சாயச் செழியன் ஓடி
நீட்டியவாள் வீச்சுக்கே அவர்கள் தப்ப,
நெடுங்கற்கால் இருந்துண்டாய் விழுந்ததங்கே!

"புறங்காட்டி ஓடினான் தமிழன்; அந்தப்
புத்தமிழ்தில் தலைக்கிறுக்கும் பிறந்த தாலே
திறங்காட்ட அஞ்சினான்! விரிந்த வானும்
வெஞ்சுடரும் வெண்ணிலவும் உடுக்கள் தாமும்
நிறங்காட்ட அஞ்சிடுமோ? அலைகொள் வாரி
நீர்காட்டப் பின்வாங்க லுண்டோ? அன்னார்
அறங்காட்டும் வழியினி்லே அடிவைத்தற்கே
அஞ்சினான்! இறக்குகின்றேன் அவளிடக்கே!"

எனும்பேச்சோடு அங்குநின்றான் செழியன் தானும்!
"என்தோழா! நாட்டன்பா! வன்மைத் தோளா!
பனங்காயைப் பதம்பார்த்து வெட்ட வேண்டும்!
பத்துக்கோர் ஆறான விழுக்காடேனும்
இனமக்கள் பழம்போக்கில் மாற வேண்டும்;
இவளுளத்தில் நல்லுணர்வு பிறத்தல் வேண்டும்;
அனைவோரும் நம்செயலை ஒப்ப வேண்டும்?
அவண்வருக! வழிப்பேச்சைக் கேட்டுப் பார்ப்போம்''

என்றுரைக்கச் சேந்தனவன் செழியனோடே
ஏகினான்! கோயிலைவிட்டேகு மக்கள்
நன்றாகத் தம் கருத்தை நவிலலானார்;
'நல்லதுதான் கோயிலெ'ன ஒருவன் சொன்னான்;
'என்றுமது தீயதப்பா' என்றான் ஓர்ஆள்;
'எங்குமுள்ளான் இங்குவந்து குந்திக் கொண்டால்,
பின்பங்கே எதுவும்நடக் காதே' என்று
பேசினான் முன்னொருவன். 'என்றன் கேள்வி

அதுதானே, என்றுரைத்தான், அதனைக் கேட்டான்!
'ஆடினான் சிவபெருமான் முடியில் வந்தே;
எதற்காக இங்குவந்தான்? யார ழைத்தார்?'
எனக்கேட்டான் ஒருவன்மற் றொருவனைத்தான்!
'புதுமைபல செய்யஎன்னால் முடியு மென்று
படித்தவரை, நம்பவைப்ப தற்கே' என்று
பதில்கிடைக்க, நம்பவைத்து நாடினோரைப்
பழிவாங்கும் கருத்துண்டோ அவனுக்'கென்றான்!

'மன்னவர்ஏன் அயலாரைக் குறிஞ்சி நாட்டில்
வரச்செய்தார்? தீயையன்றோ வரச்செய் திட்டார்!'
என்றொருவன் சொல்லிவிட்டான். 'அதனா லென்ன?
எல்லார்க்கும் நல்லதுதான் செய்கின்றார்கள்'

எனஒருவன் கூறினான். 'விநோதை என்பாள்,
அறிவில்லார் இந்நாட்டார் என்ன லாமோ?'
எனக்கேட்டான் ஓர்மானி; அதற்கும் ஓர்ஆள்.
'இல்லாத தில்லை!' எனச் சொன்னான் அங்கே!

அரசனையும் செழியனவன் கொல்லப் போனான்
அதுசரியா? துடுக்கன்றோ? என்றான் ஓர்சேய்!
'தெரியாமல் செய்துவிட்டான்; வெகுண்டோ ரெல்லாம்
தீயிலும்போய்க் குதிப்பார்கள்' என்றான் ஓர்சேய்!
உரைபலவும் கேட்டிருந்த செழியன், சேந்தன்.
'உணர்வுபெற வேண்டுமிந்த நாட்டு மக்கள்;
திருந்தும்வகை பெருந்தொண்டு செய்ய வேண்டும்;
திருந்திடுவார்!" என்றுதம்முள் பேசிச் சென்றார்.

( 215 )




( 220 )





( 225 )




( 230 )





( 235 )





( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )




( 270 )





( 275 )





( 280 )




( 285 )





( 290 )





( 295 )




( 300 )





( 305 )




( 310 )





( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )




( 340 )





( 345 )






( 350 )





( 355 )




( 360 )





( 365 )






( 370 )





( 375 )





( 380 )




( 385 )





( 390 )





( 400 )




( 405 )





( 410 )





( 415 )





( 420 )





( 425 )




( 430 )





( 435 )





( 440 )




( 445 )





( 450 )




( 455 )





( 460 )





( 465 )




( 470 )





( 475 )





( 480 )




( 485 )





( 490 )





( 495 )






( 500 )





( 505 )




( 510 )





( 515 )





( 520 )




( 525 )





( 530 )




( 535 )





( 540 )





( 545 )




( 550 )

பிரிவு -- 25

(சில்லி வீட்டில் செழியனைப் பிடிக்கச் சூழ்ச்சி நடை
பறுகிறது)

அகவல்

சில்லி வீட்டிக்குச் சேயிழை விநோதை
மெல்ல வந்தாள் நல்லுரு மறைத்தே!
சில்லி யின்பால் செப்பு கின்றாள்;
"சேந்தனின் நண்பன் போலும் செழியன்!
மாந்தரில் அவனோர் மடத்தனம் மிக்கவன்!
கோணாஎன் தொண்டுக்குக் குறுக்கில்நிற்கின்றான்!
அவனுக் கென்றன் அன்புபரி சுதந்து,
கவலை ஒழிக்கக் கருது கின்றேன்.
முத்துப் பந்தர்வான் முழுநிலாக் குடைக்கீழ்
மென்காற்று வீசுமுன் வீட்டின் அறையில்
என்னைக் காண இசைவா னோ அவன்?"
செப்பு மிதுகேட்ட சில்லி சொல்வான்;
"இருபத் தைந்தாண் டெய்திய மகனை
உடையேன் முதியேன்; உன்றன் அழகு
மடையேறிப் பாய்ந்து பயிரேற்று நீர்போல்
என்மனத் தேறி இளமை ஏற்றினால்,
பெண்ணின் இன்பம் கண்டறியாத
திண்தோள் இளைய செழியன் உன்றன்
கடைக்கண் வலையில் கவிழவா மாட்டான்?"
என்று கூறியது கேட்ட ஏந்திழை,
"இப்போ தெங்கே இருப்பான்?" என்றாள்!
"அப்பனுக் குணவை அருத்தி, அன்னை
இட்ட உணவை அருந்தி, இளைய
கட்டுடல் பட்டு மெத்தையில் கிடத்தி,
நாட்டின் நல்லது நாடி இருப்பான்!
புல்லினும் மெல்லடிப் பூனைபோல் சென்றுநான்
செழியன் காதில் செப்புதல் செப்பி; நீ
உமிழ்ந்த எச்சில் உலருமுன் இங்குக்
கொணர்வேன் அவனை; இங்கிரு,
இணையிலாய்!" என்று சென்றான் சில்லியே!




( 555 )




( 560 )




( 565 )




( 570 )




( 575 )




( 580 )