380-ம் புறப்பாட்டு இவனைத் ‘தென்னவர் வயமறவன்’ என விசேடிக்கின்றது. ‘தென்னவர்’ என்பது பாண்டியரையே சிறப்பாக உணர்த்து மாதலால், பாண்டியனே இவனது வேந்தனெனத் துணிதல் வேண்டும். ‘சாதல் அஞ்சாய்’ என்ற தொடரை நோக்கும் போது, பிற்காலத்து அமைக்கப்பெற்ற ‘சாவேறு’ என்னும் வீரர் தொகுதியினரைப்போல் இவ்வள்ளுவன் சிறந்து மேம்பட்டவனெனக் கருதுதல் தக்கதாகலாம். சங்ககாலத்துக்குப் பின்சுமார் 250 ஆண்டுகளாக (கி.பி. 650 வரை) நாஞ்சினாட்டுப் பகுதி சேரர்களது ஆட்சிக்குட்பட்டிருந்ததென ஊகித்தற்கிடமுண்டு. ஏனெனின், திருஞானசம்பந்த சுவாமிகளது காலத்தவரானநெடுமாறன் சேர அரசனோடு கோட்டாற்றிலும்விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை அறிவிக்கின்றது. கோட்டாறு, மதில் முதலியவற்றால் நன்கு காவல் செய்யப்பட்ட ஒருநகரமாக முற்காலத்தில் இருந்தது. அங்கே ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. அதனருகில் விழிஞத்தில் கடலிடையே போரொன்றும் நிகழ்ந்தது. இங்கே காட்டுவது பவானந்தர் கழகப் பதிப்பு ‘விண்டார்பட விழிஞக் கடற் கோடியுள்’ என்று கூறப்படுகின்றது. (இறை. உரை. செய். 30) (இங்கே காட்டுவது பவானந்தர் கழகப் பதிப்பு) இப்போரில் சேரனைக்காட்டகத்து வெருட்டியோட்டி (செய்.37) அவனது தென்னாட்டை நெடுமாறன் கைக்கொண்டான் (செய்.239). இங்ஙனம் கொண்ட நாடு எவ்வளவு காலம் வரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததென அறியக்கூடவில்லை. ஆனால் நாஞ்சினாட்டுக்கு இயற்கை அரணாக அமைந்த மலைத்தொடராலும் பிற இடையூறுகளாலும்பாண்டியர்களுக்குத் தாம் கைப்பற்றிய நாட்டைக் காப்பாற்றுதல் அரிதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, அவர்களிடமிருந்து சேர அரசர்கள் தாமதமின்றி நாஞ்சினாட்டை மீண்டும் பெற்றனரென்றுதான் ஊகித்தல் தகும். 10-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு இறுதியாகச் சோழ அரசர்கள் தென்னாட்டரசர்களில் தலைமை பூண்டனர். அக்காலத்துச் சேர வமிசத்தினரிடமிருந்து சோழரிடம் நாஞ்சினாடு கைம்மாறியது. முதற் பராந்தன், கேரளாந்தகன் என்னும் விருதுடைய முதல் ராஜராஜன் : இவர்களுடைய சாசனங்கள் நாஞ்சினாட்டில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. வீர சோழியம் இயற்றுவித்த வீரராஜேந்திர சோழன் (கி.பி.1062) கேரளனை வென்றதாக ஒரு சாசனங் கூறுகின்றது. முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-111 ‘கன்னியுயங் கைக்கொண்டு புனிதத் தென்னாட்டு எல்லை காட்டிக் குடமலைநாட்டுள்ள சாவேறு எல்லாந் தனிவிசும்பு ஏற.... குறுகலர் குலையக் கோட்டாறு உட்பட தெறிதொறும் நிலைகளிட்டு அருளி’னன் | |