பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு567

Untitled Document
  பேசிடும் பொழுதி லெல்லாம்
     பெருமிதம் என்னுள் ஊறும்
கூசிடும் எனது சொற்கள்
     குணமிகும் அவற்கு முன்னால்.

கற்றவர் பலபே ருண்டு
     கவிகளும் புனைய வல்லார்
மற்றவர் வியக்கப் பேசி
     மகிழ்தரும் எழுத்தும் செய்வார்
கற்றதை உணர்ந் தடங்கி,
     கசடற வாழ்ந்து காட்டி
நிற்றலை யன்றோ எங்கள்
     ‘கவிமணி’ நினைவு கூட்டும்.


தமிழ்மொழிப் பெருமை யெல்லாம்
     தண்மையும் உண்மை தானும்
அமிழ்தென அதனைச் சொல்லல்
     அழிவிலா அறிவுக் காக
குமிழ்தர இவற்றின் மேன்மை
     குலவிடும் கவியால் ஞானம்
கமழ்தரச் செய்யும் எங்கள்
     ‘கவிமணி’ நீடு வாழ்க!


துரும்பென மெலிந்த தேகம்
     துலங்கிடும் குளிர்ந்த பார்வை
இரும்பினும் வலிய உள்ளம்
     இனியவே செய்யும் எண்ணம்
பரம்பொருள் நினைவே காட்டும்
     பாரெல்லாம் பரந்த நோக்கம்
கரும்பினும் இனிய சொற்கள்
     ‘கவிமணி’ வடிவ மாகும்.