பக்கம் எண் :

பல நாட்கள்
உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்-
பண்ணையாருக்குப் பின்னால் வரும்
கூலிக்காரனைப் போல!

சில நாட்கள்
உன் கூடவே வருகிறேன்-
பாதத்தில் ஒட்டியிருக்கும்
செருப்பைப் போல!

எனினும்,
நீ உன் வீட்டுக்குள் நுழையும்போது
என்னால் பின் தொடர முடியவில்லை;
கூட வரமுடியவில்லை.

வாசலில் நின்றவாறு
உன் வீட்டையே பார்க்கிறேன்-
எல்லையில் நின்றவாறு
நாடு கடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி
தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!

43