பக்கம் எண் :

மலைத்தொடர்கள்
ஆகாயத்தில்
அலையும் மேகங்களை
இழுத்தணைத்துக் குளிர்வித்து
இன்ப வியர்வையைச்
சிந்த வைக்கின்றன.

கற்கள்
ஒன்றோடொன்று உராய்ந்து
பிஞ்சுச் சுடர்களைப்
பெற்றெடுக்கின்றன.

ஆறுகள்
ஆசை மலர்களை ஏந்திச் சென்று
கடல்தேவன் மேனியில் தூவிக்
காதல் அருச்சனை
செய்கின்றன.

நீயும் நானும்
இந்த ஊமை நாடகங்களை
ஏன்
உண்மையாக்கக் கூடாது?

விலகி நின்று
வேடிக்கை பார்க்கவா
பிறவி எடுத்தோம்?

இப்படி
இருவராயிருந்தால்
இந்த உலகம் நம்மைத்
தீண்டத் தகாதவர்களாய்
ஒதுக்கிவிடும்.

9