மலர்கள் தலையை ஆட்டியே
வருவோர் தம்மை அழைக்கவே,
கலகல எனப் பறவைகள்
காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும்
வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம்.
கிட்டச் சென்று தம்பியைத்
தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும்
கையைத் தட்டிச் சிரிக்கிறான்.
அன்னை, தந்தை, பலரையும்
அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும்
வித்தை யெல்லாம் காட்டிடும்
இசை முழக்கம் செய்திடும்
இனிய பொம்மைப் பரிசுகள் !
படம் நிறைந்த புத்தகம்
பலகை, பந்து, பலவகை
உடைகள், தின்னும் பண்டங்கள்
உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால்
பாசத் தோடு தம்பியும்
லட்டு, மிட்டாய், ரொட்டிகள்
நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத்
திரண்டு வந்து பாருங்கள்.
பிறந்த நாளில் தம்பியைப்
பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
|