பதினொரு மணிவரை தூங்கிடும் பொன்னனைப்
பார்த்ததும் தந்தை ஆத்திரம் கொண்டார்.
முதுகினில் இரண்டு பலமாய் வைத்தார்.
முணுமுணுத் தவனும் துள்ளி எழுந்தான்.
“அன்னையும் தந்தையும்
சுதந்திர நாளில்
அடிமைபோல் என்னை நடத்திடு கின்றார்.
இன்றுநான்
என்றன் இஷ்டம் போலவே
எதனையும் செய்வேன்” என்று நினைத்தான்.
கல்லை
எடுத்தான்; கருநிற நாயின்
கால்களைப் பார்த்துக் குறிவைத் தெறிந்தான்.
‘ளொள்’என நாயும் சீறிப் பாய்ந்திட
நொடியில் பொன்னன் ஓடி ஒளிந்தான்.
சாலையில்
கைகளை வீசி நடந்தான்;
தனக்கே சுதந்திரம் என்றவன் நினைத்தான்;
மாலையில்
கார்கள், வண்டிகள் வந்தும்
வழிவிட வில்லை; எதிரில் நடந்தான்.
சட்டென
ஒருகார் அவன்மேல் மோத,
தாவிக் குதித்தவன் தவறி விழுந்தான்.
பட்டெனத்
தலையில் அடிபட லாச்சே!
பந்துபோல் நெற்றியும் புடைத்திட லாச்சே! |