ஆட வில்லை; அசைய வில்லை.
அடடே, பளிங்குச் சிலைபோல்
ஆற்றின் ஓரம் நிற்கும் அந்த
அழகுக் கொக்கைப் பாராய் !
நீண்ட கால்கள், நீண்ட கழுத்து,
நிறமோ வெள்ளை யாகும்.
காண்ப தற்குச் சாது. ஆனால்
கவன மாக நோக்கும்.
ஈட்டி போன்ற அலகை முன்னால்
நீட்டிக் கொண்டு நிற்கும்.
இரையைக் கண்ட வுடனே அதுவும்
எட்டி விரைந்தே பிடிக்கும்.
மீன்கள், நண்டு, தவளை, பூச்சி
விரும்பிப் பிடித்துத் தின்னும்.
மெல்ல நாமும் நெருங்கிச் சென்றால்
விரைந்து மேலே பறக்கும் !
|