பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை66

தென்னாலி ராமனென்பான், நாகம் தீண்டிச்
       செத்தானாம்! இவ்வாறு தீமை செய்யும்
புன்னாகப் பாம்போடு பழகல்நன்றோ,
      புதியவனே சொல்?" லென்று சொக்கன் கேட்க;
"அன்றாடம் உறவாடிக் கெடுப்போர், இந்த
       அரவத்தி னுங்கொடியோர் அன்றோ?" என்றான்.

"பாம்பென்னும் பெயரிதற்கு வந்த தேனோ
      பாம்பாட்டி? "எனக்கேட்டாள். புற்றில் தூங்கும்
தாம்பென்னும் பாம்புதனை ஆட விட்டுத்
       தன்பிழப்பை நடத்திவந்தோன் அவளை நோக்கி;
"வேம்புக்கும், அரசுக்கும் வேர்கள் உண்டு;
      வேங்கைக்கும் மானுக்கும் கால்கள் உண்டு
பாம்புக்குக் காலில்லை; எனினும் நாகப்
       பாம்புக்கெல் லாம்புவியே பாத மாகும்!"

"பாம்பெலாம் பூமியையே பாத மாகப்
      பயன்படுத்திக் கொள்ளுகின்ற கார ணத்தால்,
பாம்புக்குப் `பாதம்பூ` எனப்பே ரிட்டார்;
       பாதம்பூ என்பதையே நாமெல் லோரும்,
பாம்பென்று கூறுகின்றோம் தாயே" என்றான்,
       பாராட்டி னான்சொக்கன்; அவனை நோக்கி,
"வேம்பத்தூர் நான்போக வேண்டும், என்னை
      வெறுங்கையோ டனுப்பாதீர் ஐயா " என்றான்.

அம்மி

தந்திபுரி சென்றிருந்த செவ்வேள். அந்தி
       சாய்கின்ற நேரத்தில் திரும்ப லானான்;
அந்திவிளக் கேற்றிக்கொண் டிருந்தார் பெண்டிர்;
       அப்போது குளிர்வானும் விளக்கேற் றிற்று!