பக்கம் எண் :

242நாமக்கல் கவிஞர் பாடல்கள்

VII. தீண்டாமை ஒழிப்பு

178. ஸ்ரீசங்கராச்சாரியார் அருளிச்செய்த
பஜகோவிந்தம்

வாழி கோவிந்தன் வாழி
       கோவிந்தன் என்ப தல்லால்
மதிகெட்ட மனமே! வேறு
       வழியில்லை; வாய்மை சொன்னேன்.
ஏழையே! மரணம் எய்தி
       உன்னுயிர் ஏகும் வேளை
ஏதுனைக் காக்கும் அந்த
       கோவிந்தன் சரணம் இன்றேல்
கோழையே! காலன் வந்து
       வாவெனக் கூவும் போது
கோ!என அழுது நொந்தே
       ஆ!என அலறு வாயே!
காளையே! சுற்ற தொன்றும்
       சுவைக்குத வாது கண்டாய்!
காத்திடும் பஜகோ விந்தம்
       கதிதரும் பஜகோ விந்தம்.       1

செல்வமேசெல்வம் என்னும்
       தீயபேய்த் தேர்தா கத்தை
வெல்வதே வேண்டும்; இன்றேல்
       வேதனை மிகுந்த நோயாம்;
ஒல்வதோர் தொழிலில் சொந்த
       உழைப்பினால் உரிமை யாகும்
நல்லதோர் பொருளே போதும்
       எனுமன நிறைவே நன்று.       2