| 1947 - 1949 வரையிலான இரண்டாண்டுக் காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டுமன்றி, திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்றதாக இருந்தது. போர்வாள், கதிரவன், குயில், முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த "பொன்னி" எனும் இலக்கிய இதழ் `பாரதிதாசன் பரம்பரையில்' முன்னணியில் நிற்பவராக இவரை அறிமுகம் செய்து வைத்தது. சென்னையில் பேராசிரியர் மயிலை சிவமுத்து, தமிழ்த்தென்றல் திரு.வி,க., கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சான்றோர்களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண்டிருந்தார். | |