பக்கம் எண் :

58.மீரா கவிதைகள்

எனக்கிருக்கும்
ஆசையெல்லாம்....!

அவன்:-
எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே!
எள்ளளவும் மாசில்லாப் பொன்னால் செய்த
வனப்புள்ள சங்கிலியை வாங்கி உன்றன்
வாசச்சந் தனக்கழுத்தில் போட வேண்டும்;
பனிமலரே, நீ மிகவும் கவர்ச்சி யாய் என்
பக்கத்தில் வந்தமர வேண்டும்; அந்தத்
தனியழகை நான் உண்ண வேண்டும்; உம்.... உம்...
தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்!

எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே!
எப்படியும் பளபளக்கும் பட்டுச் சேலை
உனக்கொன்று வாங்கிவந்து கொடுக்க வேண்டும்;
ஒளிவிடியல் அமைதியைப்போல் திகழும் நீ, உன்
இனிக்கின்ற உடலிலதை அணிந்து கொண்டே
என்எதிரில் வந்துநிற்க வேண்டும்; அந்தத்
தனியழகை நான்சுவைக்க வேண்டும்; உம்.... உம்...
தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்!