உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். இப் பாடல் போன்ற கற்பனை இன்றைய திரைப்படப் பாடல்களில் எதிரொலிக்கின்றது. 1962 லேயே இவ்வாறு பாடிய மீராவுக்கு, திரையிசை அனைய ஊடகங்கள் வாய்க்காதது தமிழர்தம் தவக்குறையே. எத்துணை மேற்சென்றாலும் தன் ‘நிலையின் இழியாத’ பெருமிதமுடையவர் இவர். அதனால்தானோ என்னவோ திரைகள் இவரை நாடிவரவில்லை. அவை தொலைந்து போகட்டும்! விட்டில் பூச்சிகள் தானே அவை. ‘நெஞ்சே நில்’ பொருளுக்கும் பொன்னுக்கும் போகத்துக்கும் பொய்ப்பாடல் புனையாதே’ என அறிவுரை கூறுவதில் சங்கப் பா அடித்தளமிடுகிறது. ‘வேலை இருக்கிறது நிரம்ப....’ என்பதில் பாரதியின் வளர்ச்சி புலனாகிறது. ‘கயமையைக் கைதுசெய்’ யில், பாவேந்தர் பாரதிதாசன் தந்த எழுச்சியின் மேல் எழுச்சி ஒன்று எழுவது தெரிகிறது. ‘முருகனும் முத்தையாபிள்ளையும்’ சிறியதோர் அங்கத நகைச்சுவைப் பாட்டு. பாவேந்தரின் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்’ கவிமணியின் ‘மருமக்கள் வழி மான்மியமும்’ சாதித்ததை இதுவும் சாதித்துவிடுகிறது. முத்தையா பிள்ளை முருகா முருகா என்று இருமுறை கூவியபோது வேலையாள் ஓடிவந்து முன்னே நின்றது, அவருக்குப் பிடிக்கவில்லை. ‘ஆண்டவனை அல்லவா அழைத்தேன்; போடா சனியனே’ என வசைபாடி அனுப்பிவிட்டார். ஒரு நாள் இரவு திருடர்கள் புகுந்து விடவே அவர் வோலைக்காரனை ‘முருகா முருகா’ என்றுகூவியழைத்தும் அவன் வரவில்லை; ஆண்டவனும் நேரில் |