பக்கம் எண் :

மீரா கவிதைகள்.63

ஏற்றம் காண்போம்!

பொன்ஏற்றம் அறிந்திடநாம் உரைக்க வேண்டும்;
புகழ்ஏற்றம் பெற உழைக்க வேண்டும்; இந்த
மண்ஏற்றம் அடைந்திடத்தான் வேண்டு மென்றால்
மறத்தமிழர் வேற்றுமையை அணைத்தி டாமல்
தன்ஏற்றம் தன்இன்பம் நினைத்தி டாமல்
தமிழ்ஏற்றம் தனைப்பெரிதாய்க் கருத வேண்டும்!
முன்னேற்றம் தமிழ்பெற்றால் பின்னர் அந்த
முன்னேற்றம் தமிழனுக்கும் சொந்த மாகும்!

சிங்கத்தின் பிடரியினைப் பிடித்து ஆட்டிச்
செயங்கொண்ட புகழ்பிறர்க்கும் உண்டு; மின்னும்
அங்கத்தில் விழுப்புண்ணைப் பெற்று வெற்றி
அடைந்த புகழ் பிறர்க்குமுண்டு; திரைகி ழிக்கும்
வங்கத்தில் ஏறிப்போய் வாணி கத்தின்
வளங்கண்ட புகழ்பிறர்க்கும் உண்(டு) ஆனால் முச்
சங்கத்தை வைத்துமொழி வளர்த்த மாட்சி
சரித்திரத்தில் பிறரெவர்க்கும் உண்டா? சொல்வீர்!