பக்கம் எண் :

64.மீரா கவிதைகள்

பயிற்சிமொழி ஆங்கிலம்தான் கலைச்சொல் ஒன்றும்
பைந்தமிழில் இல்லையெனச் சொல்வோர் மூடர்
உயிர்ச் சிறகை விரிக்காமல் பறவை கூட
உயரத்தில் அழகாகப் பறப்ப துண்டா?
தயிர்கடைய மாட்டாத போது வெண்ணெய்
தானாகத் திரண்டுவந்து நிற்ப துண்டா?
முயற்சிசெய்தே கலைச் சொற்கள் உருவாக் காமல்
முத்தமிழை இகழ்வதிலே அர்த்தம் உண்டா?

தலைவியினை அழைத்துவந்து வருத்தம் நீக்கும்
தாதிக்கு வாழ்த்துரைப்போன் போல, என்ன
தலைவிதியோ, சில தமிழர் பிறமொ ழிக்குத்
தாளமிட்டு வாழ்த்துரைக்க லானார்; வாழை
இலைவிருந்தைப் பெற்றள்ளோன் மந்தி யைத்தன்
எதிரினிலே இருக்கவைத்தால் என்ன மிஞ்சும்?
சிலையினிலே சேறள்ளிப் பூசும் செய்கை;
செந்தமிழைப் புறக்கணிக்கும் சிறியர் செய்கை!

திரைப்படத்தில் நாடகத்தில் இன்றுங் கூட
தேர்ந்த தமிழ் வளரவில்லை. காசுக் காக
கரைகாணாக் கடல் போன்ற தமிழை விற்க
கருதல் ஏன்? கெடுதல் ஏன்? களங்கம் ஏன் ஏன்?
தரையுலக, வானுலகச் செய்தி யாவும்
தவறாமல் விரைந்தளிக்கும் நாளி தழ்கள்
அரைகுறையாய்த் தமிழினிலே எழுது தல்ஏன்?
அன்னத்தின் மேல்அம்பை எறிதல் ஏன்? ஏன்?