392நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குடிகளைக் கோன்க ளாக்கிக்
       கோன்களைக் குடிக ளாக்கி
மடமையை மதியாய் மாற்றி
       மதிக்கும் ஓர் புதுமை கூட்டித்
திடமுறச் செய்த காந்தி
       திருக்கதை மறக்க லாமோ?       1

மேழியைச் செங்கோ லாக்கிச்
       செங்கோலை மேழி யாக்கி
ஏழையின் துயரம் நீக்கித்
       துயரத்தை ஏழை யாக்கிக்
கோழையை வீர னாக்கி
       வீரத்தின் கொலைகள் நீக்கும்
வாழிய காந்தி நாமம்
       வையகம் உளவ ரைக்கும்.       2

தூய்மையின் துணிவுண் டாக்கித்
       துணிவினைத் தூய்மை யாக்கி
வாய்மையின் வறுமை போக்கி
       வறுமையும் வாய்மை காக்கத்
தீமையைத் தீமை யாலே
       தீர்த்திட முடியா தென்று
தாய்மையே செய்த காந்தி
       தவம் செய்த தவமாம் அன்றோ?       3

உள்ளத்தைக்கோயி லாக்கி
உண்மையைத் தெய்வமாக்கிக்
கள்ளத்தைக் கடிந்து நீக்கிக்
கருணையின் காட்சிகண்டான்
எள்ளொத்த ஆசை யின்றி
‘என்கடன் பணியே‘ என்ற
தெள்ளுற்ற தியாகிகாந்தி
கண்கண்ட தெய்வ மன்றோ?