78நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கர்மத் தவநெறி காட்டினான் - நல்ல
காரியம் வீரியம் ஊட்டினான்;
மர்மம், பலிதரும் பூசைகள் - இந்து
மதமல்ல என்றுண்மை பேசினான்.       4

‘உலகை வெறுத்துத் துறந்தவர் - தெய்வ
உள்ளக் கருத்தை மறந்தவர்
கலக நடுவிலும் தங்குவேன்‘ - என்று
கர்ஜனை செய்திட்ட சிங்கமாம்.       5

பெண்ணின் பெருமையைப் போற்றினான் - ஆண்கள்
பேடித் தனங்களைத் தூற்றினான்
மண்ணின் சுகங்களை விட்டவன் - ஏழை
மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான்.       6

ஏழையின் துன்பங்கள் போக்கவும் - அவற்(கு)
எண்ணும் எழுத்தறி வாக்கவும்
ஊழியம் செய்வதே ஒன்றுதான் - தேவை
உண்மைத் துறவறம் என்றுளாம்.       7

தேசத் திருப்பணி ஒன்றையே - உண்மை
தெய்வத் திருப்பணி என்றவன்;
மோசத் துறவுகள் போக்கினான் - பல
மூடப் பழக்கத்தைத் தாக்கினான்.       8

அடிமை மனத்தை அகற்றினான் - உயர்
அன்பின் உறுதி புகட்டினான்
கொடுமை அகற்றிட முந்திடும் - தவக்
கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன்.       9

ஐம்பது வருடங்கள் முன்னமே - செல்வ
அமெரிக்கச் சிக்காகோ தன்னிலே
நம்பெரும் இந்திய நாட்டவர் - கண்ட
ஞானப் பெருமையைக் காட்டினான்.       10