குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச் சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை. 1 சுழிந்தோடி மடுக்கள்மிகும் உலகநடைச் சுழல்கள்பல நீந்தி ஏறி வழிந்தோடும் மலையருவிச் சுழல்விழுந்து கரையேற மாட்டாய் ஏனோ! கொழுந்தோடிப் படர்கலையின் குளிர்ஞானக் குன்றே! ஓர் குன்றி னின்றும் ஒழிந்தோடி மறைந்தனையே! உடன்போந்த சிறுவர்களின் உணர்ச்சி ஓட. 2 தேனூட்டும் தென்மொழியும் தெருளூட்டும் வடமொழியும் தெளியத் தேர்ந்து மேனாட்டுப் பன்மொழியும் மிகக்கூட்டிக் கடைந்தெடுத்த அறிவை யெல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்கே தனிநாட்டித் தவம்புரிந்த தகைமை யாளா! வானாட்டிற் சிறந்ததென்பாய் தமிழ் நாட்டை விட்டுப்போய் வாழ்வ தெங்கே? 3 ‘ஐயரெனில் அந்தணராய் அனைத்துயிர்க்கும் செந்தண்மை அருள்வோர்‘, என்று செய்யதிரு வள்ளுவனார் செய்தமொழித் திருக்குறளின் சீல னாகி மெய்யறிவைப் பெறநாடி மெய்வருந்திப் பொய்வெறுத்த மேன்மை யாலோ ‘ஐயா‘ என்று தனியுரைத்தால் உனையன்றித் தமிழுலகம் அறியா தையா! 4 முழுமதி மயிர்த்தா லன்ன முகந்திகழ் கருணை நோக்கும் மூர்க்கரும் நேரிற் கண்டால் முகந்திடும் சாந்த வீ்ச்சும் |