புலவர் சிவ. கன்னியப்பன் 133

பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்!       (திரு)1

அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச் செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே!       (திரு)2

தாயின் மனம் குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
தாரணி தன்னில் நம்மை யாரினிமேல் இகழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.       (திரு)3

75. கோலாட்டம்

பல்லவி

கொஞ்சம் கிளிமொழிக் கோதைய ரேநாம்
கூடி யாடுவோம் கோலாட்டம்.

அநுபல்லவி

மிஞ்சும் பலவித நோய்களைத் தடுத்திட
மெல்லிய ரேவழி சொல்லிடுவோம்.       (கொஞ்)

சரணங்கள்

நோய்கள் மிகுந்தது எதனா லேயென்று
       நுண்ணறி வோடதை எண்ணிடுவோம்
தாய்கள் குழந்தையை வளர்த்திடும் வழிகளைச்
       சரிவரச் செய்திடத் தெரிவதில்லை       (கொஞ்)1