294நாமக்கல் கவிஞர் பாடல்கள்

185. பூமிதானப்பயணம்

பூமி தானம் செய்வதே
       புண்ணியத்திற் புண்ணியம்
புனித மான முறையில் நாட்டின்
       வறுமை போகப் பண்ணிடும்;
சாமி சாட்சி யாக எங்கும்
       சண்டை கள்கு றைந்திடும்;
சரிநி கர்ச மான வாழ்வு
       சத்தி யம்நி றைந்திடும்.       1

ஏழை யென்றும் செல்வர் என்றும்
       ஏற்றத் தாழ்வு போய்விடும்;
எங்கும் யாரும் பகைமை யின்றிப்
       பங்கு கொள்வ தாய்விடும்;
கோழை யின்பொ றாமை தூண்டும்
       குற்றம் யாவும் நீங்கிடும்;
கொடுமை யான பஞ்சம் விட்டுக்
       குணந லங்கள் ஓங்கிடும்.       2

உடலுழைத்தே உணவு முற்றும்
       உண்டு பண்ணும் உழவர்கள்
உரிமை சொல்ல நிலமி லாமல்
       உள்ளம் வெந்துஇங்(கு) அழுவதா?
உடல் சுகித்துஇங்(கு) உலகி னுக்கே
       உதவி யற்ற ஒருசிலர்
ஊரி லுள்ள பூமி முற்றும்
       உரிமை கொண்டு திரிவதா?       3

உலகி லுள்ள நிலம னைத்தும்
       உலக நாதன் உடைமையே;
ஊரி லுள்ள விளைநி லங்கள்
       ஊர்ப்பொ துவாம் கடமையே.