‘‘கோபால் என்ன சொல்வான்னு தெரியலே...’’ ‘‘அதான் நாளைக் கழிச்சு மறுநா வந்துடுவாரே? அப்பத்தானே தெரியுது?’’ ‘‘ஒரு வேளை அவன் இன்னும் புதுமையான பேரா வைக்கணும்னு ஆசைப்பட்டாலும் படுவான்...’’ ‘‘இப்போதைக்கு நான் இந்த ஸ்கிரிப்ட்லேயும், டைப் அடிச்சதிலேயும், ‘கழைக் கூத்தியின் காதல்’னே எழுதி வைக்கிறேன்.’’ அவனும் அதற்குச் சம்மதித்தான். பகல் உணவுக்குப் பின் அவளோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த போது ‘‘இன்னிக்கு நாடகம் முடிஞ்சிருக்கு...அதைக் கொண்டாடணும்; நாம ரெண்டு பேருமா ஒரு சினிமாவுக்குப் போனா என்ன?’’ என்று அவளைக் கேட்டான் முத்துக்குமரன். ‘‘மாட்னி ஷோவுக்கானா நான் வர்ரேன்...’’ என்றாள் அவள். அவனும் அதை ஏற்றான். இருவருமாகப் புதிதாய் அப்போதுதான் ரிலீஸாகியிருந்த ஒரு தமிழ்ப் படத்திற்குப் போனார்கள். அது ஒரு சமூகப் படம். வங்காளிக் கதையின் தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் காட்டும் போதே பாவமன்னிப்புக் கேட்டுவிட்டுத் தொடங்கியது படம். வசனத்தையும் பாடல்களையும் திரைக்கதையையும் டைரக்ஷனையும் ஒருவரே செய்திருந்தார். கோபாலைப் போல் வேறொரு பிரபல நடிகர் அதில் ஹீரோவாக வந்து - பழைய வள்ளி திருமண நாடகத்தில் வேலன், வேடன், விருத்தன் வேடங்களை ஒருவரே போடுவது போல் - இந்தப் புதிய சமூகப் படத்தில் பஞ்சாபி பட்டாணி, வட்டி வாங்கும் மார்வாரி ஆகிய பல வேடங்களில் தோன்றினார். முத்துக்குமரன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாதவியை ஒரு கேள்வி கேட்டான்: |