பாட்டும் பாடுகிறாள்; அவள் எல்லா மரங்களிலும் ஏறி ஊஞ்சலாடி முடிகிறவரை முடியாதபடி அத்தனை நீளமாக அந்தப் பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. ‘டங்கரி டுங்காலே டுங்கிரி டங்காலே’ என்ற பாடலில் வந்த சில வரிகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்று புரியாமல் மாதவியைக் கேட்டான் முத்துக்குமரன். ‘‘சினிமா மொழி - அல்லது காதலர் மொழியைச் சேர்ந்தவையாயிருக்கும்’’ - என்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி. ‘‘சும்மாப் பேசிக்கிட்டேயிருந்தீங்கன்னாப் படத்தைப் பார்க்க முடியலே. வேணும்னா வெளியிலே போய்ப் பேசுங்க சார்?’’ - என்று பின்ஸீட்காரர் மறுபடி உரிமைப் பிரச்னையைக் கிளப்பினார். மறுபடியும் அவர்கள் மௌனமானார்கள். படம் முடிகிறவரை அவர்களால் இருக்க முடியவில்லை. பாதியிலே புறப்பட வேண்டியதாயிற்று. மவுண்ட்ரோடில் ஒரு மேற்கத்திய பாணி ஏர்க்கண்டிஷன் ஹோட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிடச் சென்றார்கள் அவர்கள். டிபனுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரன் அவளைக் கேட்டான். ‘‘ஆமாம்! நான் வெறுக்கிற மாதிரியே இந்த அரை வேக்காட்டுப் படங்களை நீயும் வெறுக்கிறியே? அப்பிடி இருந்தும் எப்பிடி இந்தத் துறையிலேயே தொடர்ந்து உன்னாலே காலந்தள்ள முடியுது?’’ ‘‘வேறே பிழைப்பு ஏது? கொஞ்சம் படிச்சிருக்கிற காரணத்துனாலே - இது மோசம்னு தெரியுது. ஆனா வேற யாரிட்டவும் மோசம்னு ஒத்தருக்கொருத்தர் சொல்லிக்கவும் மாட்டமே? இங்கே முகமன் வார்தைக்கும் - புகழ்ச்சிக்கும் ஆழமான வித்தியாசம் ஒண்ணும் கிடை |