பக்கம் எண் :

144சமுதாய வீதி

     ‘‘இப்படியே இருந்துடணும் போல இருக்கு - ’’

     ‘‘இப்பிடியே இருந்துவிட ஆசைப்பட்ட முதல் - ஆணுக்கும்
பெண்ணுக்கும் நடுவேதான் உலகமே படைக்கப்பட்டது...’’

     ‘‘அவள் கைகள் அவன் முதுகில் மாலைகளாய் இறுகித் தோளின்
செழிப்பான பகுதியில் பிடியை அழுத்தின.

     சிறிது தொலைவில் பங்களாவிலிருந்து அவுட்ஹவுஸு க்கு வரும்
பாதையில் யாரோ நடந்து வரும் செருப்பு ஓசை நெருங்கிக் கேட்கலாயிற்று.

     ‘‘ஐயோ! கோபால் சார் வர்ராரு போலிருக்கு...விடுங்க... விட்டுடுங்க...’’
என்று மாதவி பதறிப் பரபரப்படைந்து அவன் பிடியிலிருந்து திமிறி விலகிக்
கொண்டாள். முத்துக்குமரன் இதை வெறுப்பவன்போல் அவளை உறுத்துப்
பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன, கோபமான குரலில் அவன் சொற்களை
உதிர்த்தான்.

     ‘‘நேற்று ராத்திரி நாடகம் முடிஞ்சு திரும்பி வர்ரப்ப கோபால் கிட்ட
அவனுக்காகச் சொன்னதையே இப்ப உனக்காகவும் உங்கிட்டத் திரும்பச்
சொல்லவேண்டியிருக்கு. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்!’’

     அந்தச் சமயத்தில், ‘‘என்ன நேத்து ராத்திரியிலிருந்து வாத்தியாரு
எல்லாரையும் கவிதையிலேயே திட்டிக்கிட்டிருக்காரு?’’ என்று வினவிக்
கொண்டே கோபால் உள்ளே நுழைந்தான். மாதவி முகத்தில் சிரிப்பை
வரவழைத்துக் கொண்டு சுபாவமாகக் கோபாலை எதிர்கொண்டாள்.

     ‘‘மாதவி! உன் போட்டோ காப்பி ரெண்டு வேணும். பாஸ்போர்ட்
அப்ளிகேஷனுக்குத் தேவை. நாளைக்குள்ளே அத்தனை அப்ளிகேஷனையும்
அனுப்பிடணும்னு பார்க்கிறேன். அதோட நம்ம சாரையும் (முத்துக்குமரனைச்
சுட்டிக்காட்டி) ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போயி - பாஸ்போர்ட்சைஸ்
படம் எடுத்துடணும். மத்தியானத்