| அவர்கள் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டதிலிருந்து - நடிகன் கோபால் தானே சொந்தத்தில் தொடங்க இருக்கும் ஒரு நாடகக் குழுவின் நடிகர் - நடிகையர் தேர்வுக்கான ‘இண்டர்வ்யூ’ அன்று மாலை ஐந்து மணிக்கு அங்கே நடைபெற இருப்பதாக அவனால் அநுமானிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து கோபாலே அந்த ‘இண்டர்வைியூ’வை நேரில் நடத்தித் தேவையானவர்களை ‘செலக்ட்’ செய்யப் போகிறானென்றும் தெரிந்தது. அங்கே வந்து அமர்ந்திருந்த பெண்கள் யாவரையும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும், பலமுறை திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலரும் அப்படியே அவனைப் பார்க்கத் தவித்திருக்கக் கூடும். அங்கிருந்த ஆடவர்களில் தானே சுந்தரமான தோற்றமுடையவன் என்ற நம்பிக்கை மற்றவர்களைப் பார்த்ததுமே அவனுள் உறுதிப்பட்டு விட்டது. உண்மையில் அதுவும் ஒரு நியாயமான கர்வந்தானே? முதலில் அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்தான். அப்புறம் அவன் தைரியமாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான். இரைந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணழகிகள் அவனைக் கண்டதும் மெதுவாகப் பேசலானார்கள். சிலர் தங்களுக்குள்ளே நாணப்படுவது போல் அவனுக்காக நாணப்பட்டார்கள்; பழங்கள் உள்ளே கனிந்தால் வெளியே நிறம் சிவக்கும். ‘பெண்ணுக்குள் ஏதாவது கனியும் போது முகம் இப்படித்தான் சிவக்கும் போலும்’ - என்று கற்பனை செய்யத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. இரைந்து சிரித்துக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய பிரவேசத்துக்குப்பின் மெல்லப் புன்னகை புரிந்து கொண்டு மட்டுமே பேசிக் கொள்ளலாயினர். |