கோபாலைப் பார்த்தாள், கோபால் அவளைப் பார்க்காதது அவளுக்கு வசதியாய்ப் போயிற்று. டாக்ஸியை பங்களா முகப்புக்கு விடச் சொல்லாமல் நேரே ‘அவுட்ஹவுஸ் முகப்புக்கு விடச்சொன்னாள் அவள். அவுட்ஹவுஸ் ஜன்னல்களில் விளக்கொளி பளிச்சிட்டது. முத்துக்குமரன் வெளியே எங்கும் போயிருக்கவில்லை என்பதை அவள் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. புறப்படும்போது பட்ட தொல்லையை மறுபடி பட நேரிட்டுவிடாமல் இருக்க - வந்த டாக்ஸியையே ‘வெயிட்டிங்’கில் நிறுத்திக் கொண்டாள். நாயர்ப் பையன் வாசற்படி அருகே நின்றிருந்தான். ஏறக்குறைய அவுட்ஹவுஸ் வாயிற்படியை வழி மறிப்பது போலவே அவன் நின்று கொண்டிருந்தாற்போலத் தோன்றியது. ‘‘யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்னு ஐயா சொல்லி இருக்கு...’’ அவளுடைய பார்வையின் கடுமையைத் தாங்க முடியாமல் அவன் வழியைவிட்டு விலகிக் கொண்டான். உள்ளே நுழைந்ததும் அவள் தயங்கி நின்றாள். முத்துக்குமரனுக்கு முன்னால் டீப்பாயில் பாட்டிலும் கிளாஸ்களும் சோடாவும் ‘ஓபன’ரும் வைக்கப்பட்டிருந்தன. அவன் குடிப்பதற்கு தயாராயிருப்பதுபோல் தோன்றியது. வாசலருகிலே தயங்கினாற் போல மாதவி அவனை ஒரு கேள்வி கேட்டாள். ‘‘ரொம்ப பெரிய காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கீங்க போலிருக்கு. உள்ளே வரலாமா, கூடாதா?... பயமாயிருக்கே.’’ ‘‘அவங்க அவங்களுக்கு, அவங்க அவங்க செய்யிறது பெரிய காரியம் தான்.’’ |