| கமத்தது. ‘‘நீங்களும் ‘ட்ரூப்’லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...?’’ என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்துவிட்ட முத்துக்குமரன், ‘‘என்ன சொன்னீங்க...?’’ என்று மறுபடியும் அவளைக் கேட்டான், அவள் சிரித்துக்கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள். ‘‘கோபாலை நல்லாத் தெரியும்! என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.’’ ஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பதை அவன் கவனித்தான். பெண்கள் அனைவரும் தன்னோடு வந்து பேசிக் கொண்டிருப்பவளைப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், ‘‘உங்கள் பெயரை எனக்குச் சொல்லலாமா?’’ என்று கேட்டாள். ‘‘முத்துக்குமரன்...’’ ‘‘பேர் ரொம்பப் பிடிச்சிருக்கு...’’ ‘‘யாருக்கு...?‘‘ அவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்று ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தது. ‘‘இல்லே...நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்.’’ ‘‘அப்பிடியா? ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...?’’ |