| வாரம் கோலாலும்பூர். அடுத்த மூணு நாள் மலாக்கா. மறுபடி ரெண்டு நாள் கோலாலும்பூர். அப்புறம் ஒரு ரெண்டுநாள் ஸைட்ஸீயீங், ரேடியோ டெலிவிஷன் பேட்டி. கடைசி ஒரு வாரம் சிங்கப்பூரில் நாடகம். சிங்கப்பூர்லருந்தே மறுபடி மெட்ராசுக்கு ப்ளேன் ஏறிடறோம்...’’ - என்ற புரோகிராமை அவனிடம் ஒப்பித்தாள். அவளோடு உல்லாசமாகப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘‘இன்னிக்கு ஏன் உன் உதடு இத்தினி சிவப்பாயிருக்கு.’’ ‘‘........’’ ‘‘ஏன்னு சொல்லேன்...’’ ‘‘உங்க மேலே ரொம்ப ஆசையினாலே...’’ ‘‘கோபத்திலே கூடப் பொம்பிளைங்களுக்கு உதடு சிவக்கிறது உண்டு...’’ ‘‘அப்பிடியும் இருக்கலாம்! ஏனின்னாக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்லே உங்களைப்போல ஒரு மேதையை வான்னுகூடச் சொல்லாம அப்துல்லா வெறும் கூத்தாடிகளாகிய எங்களையே சுத்திச் சுத்தி வந்தாரே! அப்ப எனக்கு இந்த உலகத்து மேலேயே தாங்க முடியாத கோபம் வந்திச்சு...’’ ‘‘உனக்கு வந்திருக்கலாம். ஆனா எனக்கு கோபம் வரலே. நம்ம மாதவிக்குட்டிக்கு எத்தினி கவர்ச்சி, எத்தினி வனப்பு, எவ்வளவு கூட்டம்னு நான் பெருமைப்பட்டேன். அத்தினி கூட்டத்துக்கு நடுவே அரண்மனை மாதிரிப் பெரிய ஏர்ப்போர்ட் லவுஞ்சிலே கையிலே தாங்கமுடியாம மாலைகளைத் தாங்கிக்கிட்டுப் பட்டுப்பூச்சி மாதிரி நீ நின்னது எவ்வளவு நல்லாயிருந்திச்சுத் தெரியுமா?’’ ‘‘பக்கத்திலே யார் யாரோ நின்னாங்க. நீங்க நிக்கணும்னு எம் மனசு தவித்தது.’’ |