காசங்களின் அடியில்தான் அந்தகாரம் வசிக்கிறது. கலையுலகம் என்ற வீதி இரவும் பகலும் பிரகாசமாக மின்னுகிறது. புகழால் மின்னுகிறது. வசதிகளால் மின்னுகிறது. ஆனால் இதயங்களால் மின்னவில்லை. எண்ணங்களின் பரிசுத்தத்தால் மின்னவில்லை. அந்த வீதியின் பிரகாசத்தில் மிக வனப்புடைய பலருடைய சரீர அழகும், மன அழகும், மௌனமாகவும் இரகசியமாகவும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன. ‘‘ஊருக்குப் போனதும் ‘போடி கழுதைன்னு’ என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளிடப் போறாராம்.’’ ‘‘யார்? கோபால் உங்கிட்டச் சொன்னானா?’’ ‘‘ஆமாம், ஈப்போவுக்குப் பிளேன்ல வரமாட்டேன்னு சொன்னப்ப எங்கிட்டச் சத்தம் போட்டாரு!’’ ‘‘கலை ஒரு பெண்ணின் வயிற்றுக்கும் வசதிகளுக்கும் பாதுகாப்பளிக்கிறதே ஒழிய உடம்பிற்கும் அதன் கற்புக்கும் பாதுகாப்பளிப்பதில்லை’’. ‘‘.........’’ அவளால் இதற்குப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தை நேரே பார்ப்பதற்குத் துணிவின்றிக் கீழே தரையை நோக்கிக் குனிந்தது அவள் முகம். உதயரேகா சகிதம் அப்துல்லாவும் கோபாலும் கேமரான் ஹைலண்ட்ஸு க்குப் போய்விட்டார்கள். அவர்கள் கேமரான் ஹைலண்ட்ஸிலிருந்து திரும்பியதும் குழுவினர் அனைவரும் ஈப்போவிலிருந்து திரும்பியதும் புறப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகலில் மாதவியும் முத்துக்குமரனும், குழுவைச் சேர்ந்த துணை நடிகன் ஒருவனும், ஒரு டாக்ஸி வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, ஈப்போவைச் சுற்றியிருந்த சுங்கை, சுங்கை சிப்புட், கம்பார் முதலிய ஊர் |