களுக்குப் போய்விட்டு வந்தார்கள். ‘சுங்கை சிப்புட்’டில் கூட்டுறவு முறையில் நடத்தப்படும் ஒரு ரப்பர்த் தோட்டத்தையும், மகாத்மா காந்தி பெயரில் கட்டப்பட்டிருந்த காந்தி கலாசாலை என்ற பள்ளிக் கூடத்தையும் அவர்கள் பார்த்தார்கள். போகும் போதும் வரும்போதும் சாலையருகே மெழுகுவர்த்தி உருகி வருவதுபோல் கொடி கொடியாகச் சரிந்த ஒருவகை மலைகள் பார்க்க மிக அழகாக இருந்தன. எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு ஏழரை மணிக்குள் அவர்கள் திரும்பி விட்டார்கள். கேமரான் ஹைலண்ட்ஸ் போயிருந்தவர்கள் திரும்ப இரவு இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. மறுநாள் அதிகாலையில் கோபால், அப்துல்லா, உதயரேகா மூவரும் விமானம் மூலமும், மற்றவர்கள் கார் மூலமும் கோலாலும்பூர் புறப்பட்டனர். ஸீன்கள், ஸெட்டிங்ஸ் எல்லாம் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பத்திரமாக வந்து சேர, அப்துல்லா லாரி ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அவை ஒழுங்காக உரிய காலத்திலே அந்தந்த ஊருக்கு வந்து சேர்ந்தன. உதயரேகாவைத் தொடர்ந்து அவர்கள் விமானத்தில் அழைத்துப் போவதிலிருந்து தான் அதைப் பார்த்து ஏங்கி வழிக்குவர முடியுமென அப்துல்லா எண்ணுவதாகத் தோன்றியது மாதவிக்கு. அவள் அப்துல்லாவை நினைத்துப் பரிதாபப்பட்டாள், அவள் முத்துக்குமரனிடம் கூறினாள்: ‘‘எங்கோ மூலையில் கிடந்த உதயரேகாவுக்கு மலேயாவிலே வந்து இப்படி ஒரு யோகம் அடிக்கணும்னு தலையிலே எழுதியிருக்குப் பாருங்க...’’ ‘‘ஏன்? அவமேலே பொறாமையாயிருக்கா உனக்கு?’’ ‘‘சே! என்ன பேச்சுப் பேசறீங்க நீங்க?...நான் சொல்ல வந்தது அவ யோகத்தைப் பற்றியே தவிர, |