‘‘ரொம்ப மைனர் ஃபிராக்சர்தான்; ஹி வில் பி ஆல் ரைட் வித் இன் ஏ வீக் டைம். டோண்ட் வொர்ரி’’ என்று டாக்டர் அப்துல்லாவிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்துல்லாவும் உதயரேகாவும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள். ‘‘ஹி ஹேஸ் ஸ்பாயில்ட் எவ்வரிதிங், ஈப்போவிலேயே ஹேவி லாஸ் எனக்கு. கோலாலும்பூரிலியாவது அதை ‘மேக் அப்’ பண்ணிடலாம்னு பார்த்தேன். ஏழு நாளைக்கும் ஹெவி புக்கிங் இருக்கு இங்கே...’’ என்று அப்துல்லா மாதவிடம் அழாத குறையாக ஒப்பாரி வைத்தார். அடிபட்டுக் கிடப்பவன்மேல் சிறிதும் இரக்கப்படாமல் அவர் அப்படிப் பேசியது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. முத்துக்குமரனுக்குக் கோபமே வந்து விட்டது. ‘‘இந்தாய்யா பணம் பணம்னு பறக்காதே. உனக்கு நாடகம்தானே நடக்கணும்? அது கச்சிதமா நடக்கும். ஆறு மணிக்குத் தியேட்டருக்கு வந்துசேரு’’ என்று தீர்க்கமான குரலில் அப்துல்லாவிடம் கூறினான் முத்துக்குமரன். அப்துல்லா அப்போதும் சந்தேகத்துடன், ‘‘அது எப்பிடி சாத்தியம்?...’’ என்று ஏதோ கேட்க ஆரம்பித்தார். ‘‘பேசாதே! நாடகம் நடக்கும். தியேட்டருக்கு வா. கோபாலுக்குக் கால்லே ஃபிராக்சர்ங்கற நீயூஸ் இன்னிக்குச் சாயங்காலம் மட்டும் எந்தப் பேப்பர்லியும் வராம கொஞ்சம் பார்த்துக்க’’ என்று முத்துக்குமரன் போட்ட சத்தத்திலே மிரண்டு பதில் பேசாமல் வாய் மூடி மௌனியானார் அப்துல்லா. மாதவிக்கு முத்துக்குமரனின் திட்டம் புரிந்தது. அவனே கதாநாயகனாக நடிக்கப் போகிறான் என்பதில் அவளுக்குப் பெருமகிழ்ச்சி. அவனோ அவளோடு தான் |