முத்துக்குமரனைப் பொறுத்தமட்டில் எந்த அவநம்பிக்கையுமின்றி இருந்ததோடு ஓரளவு அலட்சியத்தோடும் இருந்தான். கோபால் குடித்துவிட்டு மரீலின் ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் ஃபிராக்சர் ஆகிப் படுத்த படுக்கையாயிருப்பது கூட்டத்தில் அந்த விநாடி வரை யாருக்கும் தெரியாதமையினால் கூட்டம் அமைதியாயிருந்தது. கோபாலுக்கு இருக்கிற ‘ஸ்டார் வால்யூ’ முத்துக்குமரனுக்கு இல்லையே என்பதுதான் அப்துல்லாவின் கொஞ்ச நஞ்சக் கவலையாயிருந்தது. கோலாலும்பூரில் முதல் நாள் நாடகத்தில் கோபால் தோன்றி ஜனங்கள் அவனையும் அவன் நடிப்பையும் நன்கு கண்டு கொள்ளும்படி செய்திருந்ததனால், கோபாலுக்கும் முத்துக்குமரனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்களோ என்று வேறு சந்தேகமாக இருந்தது அவருக்கு. இந்தச் சந்தேகம் எல்லாம் நாடகம் தொடங்குகிற வரை தான். ஆனால் நாடகம் தொடங்கியதும் கூட்டத்துக்கும் - அவருக்கும் இதெல்லாம் மறந்தே போயின. மன்மதனே ராஜா வேடந்தரித்து தர்பாரில் வந்து அமர்வதுபோல் முத்துக்குமரன் மேடைக்குவந்து தர்பாரில் அமர்ந்தபோது முதல் நாள் அதே காட்சியில் கோபால் பிரவேசித்தபோது இருந்ததைவிட அதிகமான கைதட்டல் இருந்தது. மாதவியும் அன்று மிக அழகாயிருப்பது போல் பட்டது. பளபளவென்று மேனி மின்னும் அரபிக் குதிரை பாய்ந்து வருவது போல் அன்று வாளிப்பாயிருந்தாள் அவள். ‘நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்’...என்ற பாட்டுக்கேற்ப அவள் ஆடியபோது பிரமாதமாக இருந்தது. முத்துக்குமரன் உடன் நடிக்கிறான் என்பதால் மாதவியும், மாதவி உடன் நடிக்கிறாள் என்பதால் முத்துக்குமரனும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக நடித்தார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு காட்சி |